இன்றுடன் விரதத்தை..!! நிறைவு செய்த சமயபுரம் மாரியம்மன்..!!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் நடைபெறும் பூச்சொரிதல் மற்றும் தேர்த்திருவிழாக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சமயபுரம் மாரியம்மன், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எந்தவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாமல் தடுத்து சகல சவுபாக்கியங்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அம்மன்

மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருந்து பக்தர்களின் துயரை துடைப்பார் என்பது ஐதீகம். இந்த நாட்களில் அம்மனுக்கு அபிஷேகங்கள், நைவேத்தியங்கள் செய்ய மாட்டார்கள். அம்மனுக்கு துளு மாவு, இளநீர், பானகம் ஆகியவை மட்டுமே படைக்கப்படும்.

சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி அம்மன் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேரோட்டத்தன்று இரவு அம்மன் தனது பச்சைப்பட்டினி விரதத்தை முடிப்பார்

இதற்காக மாரியம்மனின் சகோதரியாக கருதப்படும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் இருந்து அபிஷேக திரவியங்கள், பட்டு வஸ்திரம், மாலை, சந்தனம், தாம்பூலம் ஆகியவற்றுடன் தயிர் சாதம், காய்கறி கூட்டு ஆகியவை சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு படைக்கப்படுவது வழக்கம்.

அதன்படி, சமயபுரம் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றதை தொடர்ந்து மாலை 7 மணியளவில் திருவானைக்காவலில் இருந்து தளிகை மற்றும் அபிஷேக திரவியங்கள், மாலைகள், வஸ்திரங்களை யானை மீது எடுத்துக்கொண்டு கோவில் உதவி ஆணையர் ஜெயப்பிரியா தலைமையில் அர்ச்சகர்கள், கோவில் ஊழியர்கள் மேளதாளங்கள் முழங்க இரவு 9 மணியளவில் சமயபுரம் சென்றடைந்தனர்.

அந்த அபிஷேக பொருட்கள் கோவிலுக்குள் எடுத்து செல்லப்பட்டு சமயபுரம் மாரியம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் தளிகை நிவேதத்துடன் தனது பச்சைப்பட்டினி விரதத்தை அம்மன் நிறைவு செய்தார்.

 மேலும் செய்திகலுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
author avatar
kavitha

Leave a Comment