டிஎன்பிஎல் 2021:திருச்சி அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

நேற்று நடைபெற்ற டிஎன்பிஎல் 2021 போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி ,ரூபி திருச்சி அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) 5-ஆவது சீசன் டி 20 போட்டிகள் கடந்த ஜூலை 19 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.கொரோனா பரவல் காரணமாக ரசிகா்கள் இல்லாமல் முதல் முறையாக டிஎன்பிஎல் போட்டிகள் நடைபெறுகின்றது.

மேலும்,இப்போட்டிகள் ஆகஸ்ட் 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. டி.என்.பி.எல் போட்டிகள் முழுவதையும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இடம் பெற்றுள்ள அணிகள்:

இந்த தொடரில் சேப்பாக் சூப்பா் கில்லீஸ், சேலம் ஸ்பாா்ட்டன்ஸ், மதுரை பேந்தா்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், லைகா கோவை கிங்ஸ், ரூபி திருச்சி வாரியா்ஸ், ஐடிரீம்ஸ் திருப்பூா் தமிழன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் இடம் பெற்றுள்ளனர்.

முதல் இரண்டு ஆட்டங்கள் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டன. இதன்காரணமாக,பங்கேற்ற அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

ரூபி திருச்சி வாரியஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதல்:

இந்நிலையில்,நேற்று நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதிக் கொண்டன. இப்போட்டியில் டாஸ் வென்ற நெல்லை அணியின் கேப்டன் பாபா அபாரஜித் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

அதன்படி,ரூபி திருச்சி வாரியஸ் அணியினர் பேட்டிங் இறங்கினர்.அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய அமித் சாத்விக் நிதானமாக விளையாடி,52 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சர்களை அடித்து 71 ரன்களை எடுத்தார்.இதனையடுத்து,ரூபி திருச்சி வாரியஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்தது.இதில்,நெல்லை அணியின் ஷருன் குமார் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதனையடுத்து,இலக்கை நோக்கி களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்த விக்கெட்களை இழந்தது.மேலும், 14-வது ஓவரில் பந்து வீசிய மதிவாணன் 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இறுதியில் 13.4 ஓவர்கள் முடிவிலேயே நெல்லை ராயல் கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 77 ரன்களிலேயே சுருண்டது. இதனால்,ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைப் பெற்றது.மேலும்,திருச்சி அணி 2 புள்ளிகளைப் பெற்று,பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மேலும், இப்போட்டியில் அதிரடியாக விளையாடி ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வீரர் அமித் சாத்விக் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.