தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி – முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

தியாகராஜ பாகவதர் பேரனுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிப்பு.

தியாகராஜ பாகவதர் பேரனுக்கு அரசு சார்பில் குறைந்த வாடகை குடியிருப்பு மற்றும் 5 லட்சம் நிதியுதவி  வழங்கப்படும் எனதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம்.கே.டி.” என்று அன்போடு அழைக்கப்பட்ட திரு எம்.கே தியாகராஜ பாகவதர் அவர்கள், தமிழ்த் திரைப்பட உலகின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனும், மிகச்சிறந்த கர்நாடக சங்கீத பாடகருமாகத் திகழ்ந்தவர் ஆவார். அவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக தமிழகத்தில் அன்றைய காலகட்டத்தில் உலா வந்தன.

குறிப்பாக 1944 ஆம் ஆண்டு வெளியான “ஹரிதாஸ்” என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த இவர் தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராகக் கருதப்பட்டார். தமிழ்த் திரையுலகில் மிகப்பிரபலமாக அக்காலக்கட்டத்தில் விளங்கியதிரு.எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்களின் மகள் வழிப்பேரன் திரு சாய்ராம் மற்றும் அவரது குடும்பத்தினர். தற்போது மிகவும் வறிய நிலையில், குடியிருக்க வீடின்றி, மிகவும் சிரமமான சூழ்நிலையில் வசித்து வருவதை அறிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள், திரு சாய்ராம் அவர்கள் குடும்பத்தினருக்கு அரசு சார்பில், குறைந்த வாடகையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் பொது ஒதுக்கீட்டின் கீழ் வீடு ஒன்றினை ஒதுக்கித் தர உத்தரவிட்டுள்ளதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் ஆணையிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan