மீண்டும் ஐபிஎல்லில் களமிறங்கும் ரிஷப் பண்ட்… மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

2024 ஐபிஎல்லின் 17வது சீசன் நடைபெற உள்ள நிலையில், இதற்கான மினி ஏலம் வரும் 19ம் தேதி முதல்முறையாக துபாயில் நடைபெற உள்ளது. இதனால், அனைவரது எதிர்பார்ப்பும் ஐபிஎல் மீது தான் உள்ளது. இந்த நிலையில், இந்திய விக்கெட் கீப்பர், பேட்டர் ரிஷப் பண்ட் வரும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) மீண்டும் டெல்லி கேபிடல்ஸ் அணியை வழிநடத்த தயாராக இருப்பதாகவும், ஆனால், டெல்லி அணியின் Impact Player-ஆக ரிஷப் பண்ட் விளையாடுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர இளம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், கடந்த ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி, கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாக எந்தவித கிரிக்கெட்டிலும் விளையாடாமல் இருந்து வருகிறது. ஓராண்டாக காயத்தில் இருந்து மீண்டும் வரும் ரிஷப் பண்ட், கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை முழுவதையும் அவர் தவற விட்டிருந்தார்.

இந்த சூழலில் ரிஷப் பண்ட், படிப்படியாக தனது உடற்தகுதியில் முன்னேற்றம் கண்டு தற்போது பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், 2024 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் மீண்டும் களமிறங்க இருக்கிறார் என டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நிர்வாகம் கூறியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஐபிஎல் 2024ல் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் நிச்சயம் விளையாடுவார்.

ஐபிஎல் 2024 ஏலம்: எந்தெந்த வீரர்களுக்கு எவ்வளவு விலை..! 333 பிளேயர்களின் முழு பட்டியல் வெளியீடு!

விக்கெட் கீப்பராக விளையாடாமல், பேட்ஸ்மேனாக விளையாடினால் அவரே அணியை வழிநடத்துவார் என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், கடந்த மாதம், டெல்லி கேபிடல்ஸ் கிரிக்கெட் இயக்குனர் சவுரவ் கங்குலி, 2024 ஐபிஎல் போட்டிக்கு பந்த் மீண்டும் வருவார் என்று கூறியிருந்தார். எனவே, 17வது ஐபிஎல் சீசன் தொடங்கும் முன், 26 வயதான அவர் முழு உடற்தகுதியுடன் இருப்பார் என நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸின் கூட்டத்தில், ரிக்கி பாண்டிங், சவுரவ் கங்குலி மற்றும் பிரவின் ஆம்ரே ஆகியோர் அடங்கிய பயிற்சியர்களுடன் ரிஷப் பண்ட்டும் கலந்துகொண்டுள்ளார். அப்போது, டெல்லி அணி வீரர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, 2024 ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியில் மீண்டும் களமிறங்கும் ரிஷப் பண்ட், அணியை வழிநடத்துவார் என்றும் Impact Player-ஆக விளையாடுவார் எனவும் கூறப்படுகிறது. ரிஷப் பண்ட் கம்பேக் கொடுக்கிறார் என்ற செய்தி பலருக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்