தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டியும், துணை முதல்வராக பாட்டி விக்ரமார்காவும் பதவியேற்றனர்!

நாட்டில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவையில் தேர்தலில் தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. கடந்த 10 வருடங்களாக ஆட்சி செய்து வந்த முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ் கட்சியை தோற்கடித்து, காங்கிரஸ் முதன் முறையாக தெலுங்கானாவில் ஆட்சியை கைப்பற்றியது.

இதில் குறிப்பாக தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 64 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த சூழலில், தெலுங்கானாவில் யார் முதல்வர் என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்த நிலையில், தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக இன்று பொறுப்பேற்க உள்ளார் என கூறப்பட்டது.

தெலுங்கானா முதல்வராகும் ரேவந்த் ரெட்டி.! விழா ஏற்பாடுகள் தீவிரம்.!

பதவியேற்புக்காக ஹைதிராபாத் எல்பி ஸ்டேடியத்தில் பிரமாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில், ரேவந்த் ரெட்டி முதல்வராக பதவியேற்க உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தின் புதிய முதல்வராக ரேவந்த் ரெட்டியும், துணை முதல்வராக பாட்டி விக்ரமார்காவும் பதவியேற்று கொண்டனர்.

அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவ்விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி பங்கேற்றுள்ளனர். தெலுங்கானா அமைச்சர்களாக உத்தம் குமார் ரெட்டி, தாமோதர் ராஜநரசிம்மா, கோமாட்டிரெட்டி வெங்கட் ரெட்டி, டி.ஸ்ரீதர் பாபு ஆகியோர் பதவியேற்றனர்.

மேலும், தெலங்கானா அமைச்சரவையில் பொங்குலேடி சீனிவாச ரெட்டி, பொன்னம் பிரபாகர், சுரேகா கோண்டா, அனசுயா சீதக்கா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதுபோன்று, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் தும்மல நாகேஸ்வர ராவ் மற்றும் ஜூபல்லி கிருஷ்ணராவ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்