இவர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் – வைகோ

எஸ்டிபிஐ அலுவலகம் மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ சோதனைக்கு வைகோ கண்டனம். 

தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ அலுவலகம் மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த சோதனையில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து வைகோ அறிக்கை  வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அண்மைக்காலமாக ஒன்றிய பா.ஜ.க. அரசு, தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத் துறை ஆகியவற்றின் மூலம் இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் இல்லங்கள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றில் புகுந்து சோதனை என்ற பெயரில் அவர்களை அச்சுறுத்தி வருகிறது.

ஆம்புலன்ஸ் வண்டிகள் மூலம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவி செய்தல், இயற்கை பேரழிவின்போது அனைத்து மக்களுக்கும் நிவாரண உதவிகளை அளித்தல், குருதிக் கொடை வழங்குதல், மத நல்லிணக்க ஊர்வலங்களை நடத்தி, ஒற்றுமைப் படுத்துதல் என பல வகைகளிலும் இந்த அமைப்புக்கள் ஆரவாரமின்றி பணியாற்றிக் கொண்டிருக்கின்றன.

இந்த அமைப்புகளை பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதாக புழுதிவாறித் தூற்றும் பணியில் சங் பரிவார் கூட்டம் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டு வருகிறது. மக்கள் ஆதரவுடன், வேரூன்றி வளர்ந்து வரும் இந்த அமைப்புக்களை இயங்கவிடாமல் தடுத்து, அழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் காவிக் கும்பல் சதித் திட்டம் தீட்டி செயல்படுத்திக் கொண்டு வருகிறது. இந்தப் போக்கினை மறுமலர்ச்சி தி.மு.க. கண்டிக்கிறது. அவர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment