#IPL2022: புள்ளிப்பட்டியலில் 2-ம் இடம்.. 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியிடம் தோல்வியை சந்தித்தது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 31-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் – கே.எல்.ராகுல் களமிறங்கினார்கள்.

சிறப்பான தொடக்கத்தை கே.எல்.ராகுல் கொடுக்க, மறுமுனையில் 3 ரன்கள் மட்டுமே அடித்து டி காக் தனது விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து களமிறங்கிய மனிஷ் பாண்டே 6 ரன்கள் எடுத்து வெளியேற, பின்னர் க்ருனால் பாண்டியா களமிறங்கினார். இவர் கே.எல்.ராகுலுடன் இணைந்து அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 30 ரன்கள் எடுத்து ராகுல் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய தீபக் ஹூடா 13 ரன்கள் எடுத்து வெளியேற, அதிரடியாக ஆடிவந்த க்ருனால் பாண்டியா 42 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய ஸ்டாயினிஸ் 24 ரன்கள் எடுத்தும், 16 ரன்கள் எடுத்து ஜேசன் ஹோல்டர் தங்களின் விக்கெட்களை இழந்தார்கள். இறுதிவரை போராடிய லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியிடம் தோல்வியை சந்தித்தது.