#Breaking:புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் – குடியரசுத்தலைவர் முக்கிய உத்தரவு!

இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா வருகின்ற மே 14 ஆம் தேதியுடன் ஓய்வு பெரும் நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவராக ராஜீவ் குமாரை நியமனம் செய்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை 24 பேர் தலைமை தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட நிலையில்,சுசில் சந்திரா 24 வது தலைமை தேர்தல் ஆணையராக இருந்து வந்தார்.தற்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் 25-வது தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ராஜீவ் குமார்,கடந்த 1984 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.மேலும்,இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தின் இயக்குநர்,நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில் உறுப்பினர், வங்கி வாரிய பணியகம் (BBB) உறுப்பினர், நிதித் துறை ஒழுங்குமுறை நியமனங்கள் தேடல் குழு (FSRASC), சிவில் சர்வீசஸ் வாரியம் போன்ற பல வாரியங்கள் மற்றும் குழுக்களில் பணிபுரிந்துள்ளார்.இதனையடுத்து,பிப்ரவரி 2020 இல் இந்திய நிர்வாக சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.அதன்பின்னர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில்,மூத்த தேர்தல் ஆணையராக அவர் இருந்து வரும் நிலையில்,தேர்தல் ஆணையத்தின் விதிகளின் படி,தற்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும்,வருகின்ற மே 15 ஆம் தேதி அவர் பதவி ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.