அனுமதி இன்றி எந்த அறிக்கையும் வெளியிட வேண்டாம் -ரஜினி மக்கள் மன்றம்

  • தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் யாருக்கும்  ரஜினி ஆதரவு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. 
  • தன்னிச்சையாக எந்த அறிக்கையும் வெளியிட கூடாது என்று ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்த நிலையில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.மேலும் மாநகராட்சி,பேரூராட்சி,நகராட்சி ஆகியவற்றின் தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஊரக உள்ளாட்சிகளின் வாக்கு எண்ணிக்கை அடுத்த ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் அனைத்தும் முழு வீச்சில் தயாராகி வருகின்றது.

உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் கட்சித் தொடங்கி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியில்லை என்றும் யாருக்கும் ஆதரவு கிடையாது என்றும் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.பின்னர் திருச்சி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பில் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவோ, ஆதரவாகவோ வாக்கு சேகரிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. 

 

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மீண்டும் அறிக்கை ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில், ரஜினி மக்கள் மன்ற அனைத்து  மாவட்ட செயலாளர்கள், மாநில தலைமையின் அனுமதியின்றி தன்னிச்சையாக எந்த அறிக்கையும் பத்திரிக்கைகள் ,ஊடகங்கள்  மூலமாகவோ மற்றும் மாவட்ட வாட்ஸ்சப் குழுக்கள் மூலமாகவோ பகிர வேண்டாம் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.