பிரியங்கா காந்தி கைது:”உங்கள் தைரியத்தைக் கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள்” – எம்பி ராகுல்காந்தி..!

லக்கிம்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைதுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்திரபிரதேசம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து,லக்கிம்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று அதிகாலை லக்னோவிலிருந்து லக்கிம்பூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதைக் காரணம் காட்டி  போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.அப்போது,பிரியங்கா காந்தியையும், காங்கிரஸ் கட்சியினரையும் பெண் போலீசார் பிடித்து இழுத்தனர்.

இதனால் ஆவேசமடைந்தார் பிரியங்கா அவர்கள்,அப்போது உரத்த குரலில் போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும், ஜீப்பில் வலுக்கட்டாயமாக இப்படி ஏற்றுவது என்பது கடத்திச் செல்வது போன்றது, உங்களுக்கு தைரியம் இருந்தால் கைது செய்வதற்கான வாரண்ட் கொண்டு வந்து,பின்னர் கைது செய்யுங்கள்.மாறாக,இவ்வாறு எல்லாம் செய்வதற்குபேர் கடத்தல்,பாலியல் சீண்டல்,தாக்குதல் என உரத்து குரலில் பிரியங்கா ஆவேசமாக பேசினார்.பிரியங்கா காந்தியின் இந்த ஆவேச வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து,அவர் கைது செய்யப்பட்டதாக இளைஞர் பிரிவு தேசிய தலைவர் ஸ்ரீனிவாஸ் பிவி ட்வீட் செய்தார்.

இந்நிலையில்,பிரியங்கா காந்தி கைதுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.மேலும்,இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:”பிரியங்கா நீங்கள் பின்வாங்க மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும்,உங்கள் தைரியத்தைக் கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள். நீதிக்கான இந்த அகிம்சை போரில்,நாட்டின் விவசாயிகளை வெற்றி பெறச் செய்வோம்”,என்று பதிவிட்டுள்ளார்.