“பிரியங்கா காந்தி கைது;சட்டவிரோதமானது, முற்றிலும் வெட்கக்கேடானது” – முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம்..!

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி  கைது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கார் மோதியதில் 4 பேர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.மேலும்,விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வருகிறது.இந்த சம்பவத்துக்கு,நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து,நேற்று விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூர் சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.தற்போது அவர் போலீஸ் காவலில் உள்ளார்.மேலும்,அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாக பிரியங்கா காந்தி உள்ளிட்ட 11 பேர் மீது உத்தரப்பிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில்,பிரியங்கா காந்தி  கைது குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சரும்,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் கூறுகையில்:

“சட்டத்தின் பல விதிகள் மீறப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் சட்டம் & ஒழுங்குக்கு வேறு அர்த்தம் இருப்பதாக தெரிகிறது.அதாவது,சட்டம் என்றால், அம்மாநில முதல்வர் ஆதித்யநாத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு என்றால் ஆதித்யநாத்தின் உத்தரவு.

நேற்று அதிகாலை 4:30 மணியளவில்,சூரிய உதயத்திற்கு முன், ஒரு ஆண் போலீசாரால் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார். இது பிரியங்கா காந்தி அவர்களுக்கு சொந்தமான அரசியலமைப்பு உரிமைகளை உபி அரசு கடுமையாக மீறுவதாகும்.இது முற்றிலும் சட்டவிரோதமானது மற்றும் முற்றிலும் வெட்கக்கேடானது”,என்று கூறியுள்ளார்.