வேளாண் சட்டம் ரத்து குறித்து ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் விவசாயிகளின் நண்பன் என்பது வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள், விவசாய சங்கங்கள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி அவர்கள் இந்த மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘விவசாயிகளின் வருமானம் பன்மடங்கு உயரும் என்ற நல்ல நோக்கத்தின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், 2020 ஆம் ஆண்டு விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் மற்றும் 2020 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் சேவைகள் சட்டம் என மூன்று சட்டங்கள் சென்ற ஆண்டு நாடாளுன்றத்தில் இயற்றப்பட்டன.
இருப்பினும், இந்த மூன்று சட்டங்கள் மூலம், விளைபொருட்களில் பெரும் வணிக நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தத் துவங்கும் என்றும், விவசாயிகளின் நிலங்கள் பறிபோய்விடும் என்ற அச்சம் விவசாயிகளிடத்தில் இருக்கிறது என்றும், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்றும் தெரிவித்து ஓராண்டிற்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்தச் சூழ்நிலையில், மேற்படி சட்டங்களில் உள்ள பயன்களை விவசாயிகளின் ஒரு பிரிவினரிடம் புரிய வைக்க முடியவில்லை என்று தெரிவித்து மேற்படி சட்டங்களை திரும்பப் பெறுவதாக மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதன்மூலம், மாண்புமிகு இந்தியப் பிரதமருக்கு உள்ள பெருந்தன்மையும், விவசாயிகளின்பால் அவருக்கு உள்ள அக்கறையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் நண்பன் என்பது வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது.
மாண்புமிகு இந்தியப் பிரதமரின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இதற்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாண்புமிகு இந்தியப் பிரதமருக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்த மாண்புமிகு இந்தியப் பிரதமரின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
அஇஅதிமுக சார்பில் மாண்புமிகு பிரதமர் @PMOIndia அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.#FarmLawsRepealed pic.twitter.com/LzHHFFBPiu
— O Panneerselvam (@OfficeOfOPS) November 19, 2021