ரூ.100 லட்சம் கோடியில் ‘கதி சக்தி மாஸ்டர் திட்டம்’,100 சதவிகித சாலைகள் : பிரதமர் மோடி அறிவிப்பு..!

ரூ.100 லட்சம் கோடியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் ‘கதி சக்தி மாஸ்டர் திட்டத்தை’ பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு,பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முதலில் மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். பின், பிரதமருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து,  டெல்லி செங்கோட்டையில் மூவர்ண தேசிய கோடியை பிரதமர் ஏற்றிய தருணத்தில் ஹெலிகாப்டரிலிருந்து மலர்கள் தூவப்பட்டன.

நினைவு கூறுவோம்:

அதன்பின் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.அப்போது, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவித்து தனது உரையை தொடங்கினார். “மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட அனைவரின் தியாகத்தையும் இந்த நாளில் நினைவு கூற வேண்டும். நமது விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவு கூறுவதற்கான தினம் இன்று. பிரிவினையால் உயிரிழந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி மரியாதை செலுத்துவோம்.

ஒலிம்பிக் வீரர்கள்:

2020 ஒலிம்பிக் குழுவை பாராட்டிய பிரதமர், “டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவை பெருமைப்படுத்திய விளையாட்டு வீரர்கள் இன்று நம்மிடையே இருக்கிறார்கள். இன்று அவர்களின் சாதனையை பாராட்டும்படி நான் தேசத்தை கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் நம் இதயங்களை வென்றது மட்டுமல்லாமல் எதிர்கால சந்ததியினருக்கும் ஊக்கமளித்தனர். சுமார் 240 ஒலிம்பியன்கள், உதவி ஊழியர்கள் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் விளையாட்டு கூட்டமைப்பு அதிகாரிகள் செங்கோட்டையில் இந்த ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளனர்.

சேவை செய்தவர்களுக்கு பாராட்டுக்கள்:

கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட நாட்டிற்கு உதவிய அனைத்து முன்னணி மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்த மோடி, “தொற்றுநோய்களின் போது,நம் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் தடுப்பூசிகளை உருவாக்கும் விஞ்ஞானிகள் உணர்வுடன் பணியாற்றினர்.இது தேசத்திற்கான சேவை. இந்த காலகட்டத்தில் மற்றவர்களுக்கு சேவை செய்ய ஒவ்வொரு தருணத்தையும் அர்ப்பணித்த அனைவரும் நமது பாராட்டுக்கு உரியவர்கள்”,என்று தெரிவித்தார்.

கொரோனா போர்;தடுப்பூசி திட்டம்:

நாட்டின் தடுப்பூசி திட்டத்தை பாராட்டி, அவர் மேலும் கூறுகையில், “கொரோனா மனித குலத்திற்கு மிகப் பெரும் சவாலாக மாறியது. ஆனால்,இந்தியர்கள் மிகவும் பொறுமையுடன் கொரோனாவுக்கு எதிராக மிகப் பெரிய போரை நடத்தியுள்ளனர்.

நாம் பல சவால்களை சந்தித்தோம் ஆனால் ஒவ்வொரு பகுதியிலும்,நாம் அசாதாரண வேகத்தில் வேலை செய்தோம். இது நமது தொழிலதிபர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் பலத்தின் விளைவாகும், இன்று இந்தியா தடுப்பூசிகளுக்கு வேறு எந்த நாட்டையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் இன்று இந்தியாவில் நடத்தப்படுகிறது என்று நாம் பெருமையுடன் கூறலாம். இதுவரை 54 கோடிக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்.

இந்திய சுதந்திர தின பிரதமரின் அறிவிப்புகள்:

 “உஜ்வாலா (இலவச சமையல் எரிவாயு திட்டம்) முதல் ஆயுஷ்மான் பாரத் வரை, நாட்டின் ஏழைகளுக்கு அரசாங்க திட்டங்களின் வலிமை தெரியும் … இப்போது நாம் செறிவூட்டலை நோக்கி செல்ல வேண்டும்.அனைத்து கிராமங்களுக்கும் 100 சதவிகித சாலைகள், 100 சதவிகித வீடுகளுக்கு வங்கி கணக்கு 100 சதவிகிதம் பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டை இருக்க வேண்டும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் 100 சதவிகிதம் தகுதியுள்ளவர்களுக்கு எரிவாயு இணைப்பு இருக்க வேண்டும் என்பதே நமது நோக்கமாக உள்ளது.

ஒவ்வொரு தேசத்தின் வளர்ச்சிப் பயணத்திலும்  நாடு புதிய முடிவுகளுடன் தன்னை முன்னெடுத்துச் செல்லும்போது ஒரு புதிய முடிவிலிருந்து தன்னை வரையறுக்கும் நேரம் வருகிறது. இன்று, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் அந்த நேரம் வந்துவிட்டது.

பெரிய மாற்றங்கள், பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டுவர அரசியல் விருப்பம் தேவை. இன்று, இந்தியாவில் அரசியல் விருப்பத்திற்கு பஞ்சமில்லை என்பதை உலகம் பார்க்கிறது. சீர்திருத்தங்களைக் கொண்டுவர நல்ல மற்றும் புத்திசாலித்தனமான நிர்வாகம் தேவை.

சம வாய்ப்புகள்:

தற்போது, நாட்டில் 33 சைனிக் பள்ளிகள் இயங்கி வருகின்றன.இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, சைனிக் பள்ளிகளில் பெண்களை சேர்க்கும் முதல் சோதனை மிசோரமில் மேற்கொள்ளப்பட்டது.அதன்படி இனி,நாட்டின் அனைத்து சைனிக் பள்ளிகளும் பெண்களுக்காகவும் திறக்கப்படும்.

ஏனெனில்,இன்று, கல்வி அல்லது ஒலிம்பிக்காக இருந்தாலும், எங்கள் மகள்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். அவர்களுக்கு சம வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், அவர்கள் பாதுகாப்பாகவும் மரியாதையாகவும் உணர்கிறார்கள்.சைனிக் பள்ளிகளை நிறுவுவதன் நோக்கம், சிறு வயதிலிருந்தே மாணவ,மாணவிகளை இந்திய ஆயுதப் படையில் நுழைவதற்குத் தயார்படுத்துவதாகும்.சைனிக் பள்ளிகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள சைனிக் பள்ளிகள் சங்கத்தால் நடத்தப்படுகின்றன.

தேசிய ஹைட்ரஜன் மிஷன்:

இந்தியாவை உலகின் மிகப்பெரிய எரிவாயு ஏற்றுமதியாளராக மாற்றும் நோக்கத்துடன் பிரதமர் தேசிய ஹைட்ரஜன் மிஷனையும் தொடங்கினார். “இந்தியா மட்டுமே அதன் காலநிலை இலக்குகளை அடைவதற்கான பாதையில் உள்ளது. கிரீன் ஹைட்ரஜன் உலகின் எதிர்காலம் மற்றும் இந்தியாவை உலகளாவிய மையமாக மாற்ற திட்டமிட்டுள்ளேன்.

சிறு விவசாயிகளை இந்தியாவின் பெருமை என்று அழைத்த பிரதமர் மோடி,  “நம் விவசாயிகளுக்கு இப்போது சாகுபடி செய்ய குறைந்த நிலம் உள்ளது என்ற உண்மையை சரிசெய்ய வேண்டும்.நம் விவசாயிகளில் 80% க்கும் அதிகமானவர்கள் 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலத்தைக் கொண்டுள்ளனர். நாம் நமது சிறு விவசாயிகளுக்கு உதவுவதில் கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கத்தின் திட்டங்களின் அதிகபட்ச நன்மைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும்.இதற்காக கடன் அட்டை வழங்குதல், சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

பிரதான் மந்திரி கதிசக்தி திட்டம்:

நாட்டின் முழுமையான உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூ.100 லட்சம் கோடி மதிப்பில் விரைவில் ‘பிரதான் மந்திரி கதிசக்தி திட்டம்’ தொடங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் மூலம் அதிக அளவில் இளைஞர்களுக்கு புதிய  வேலைவாய்ப்புக் கிடைக்கும்.மேலும்,உள்நாட்டு உற்பத்தியாளர்கள் சர்வதேச அளவில் போட்டியிடவும், எதிர்கால பொருளாதார மண்டலங்களையும் உருவாக்க முடியும்.

ரயில் சேவை:

75-வது சுதந்திரன விழாவை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 75 வந்தே பாரத் ரயில்கள் சேவை விரிவுபடுத்தப்படும்.அதேபோல,வடகிழக்கு மாநிலங்களுக்கும் ரயில் சேவை விரைவில் விரிவுபடுத்தப்படும்.மேலும், மியான்மர், வங்கதேசம், தென்கிழக்கு ஆசியப் பகுதிகளுக்கும் ரயில் போக்குவரத்து சேவை கிடைக்க வழிவகை செய்யப்படும்”,என்று தெரிவித்தார்.