அதிமுக – பாமக கூட்டணி தொடருமா..? இன்று பாமக நிர்வாக குழு கூட்டம்..!

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறி பா.ம.க சார்பில் பல போராட்டங்கள் நடைபெற்றது. இதனால், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் பாமக கூட்டணி தொடருமா..? என கேள்வி எழுந்துள்ளது.

ஆனால், ஆளும் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவின் கோரிக்கையை அதிமுக அரசு இதுவரை எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், கடந்த 27-ம் தேதி பாமக நிறுவனா் ராமதாஸ் காணொளி மூலம் செய்தியாளர்களை சந்தித்தபோது, வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு குறித்து அதிமுக அரசு இன்றுக்குள் அறிவிக்கவில்லை எனினும் தேர்தல் கூட்டணி பற்றி முடிவு செய்து அறிவிப்போம் என தெரிவித்தார்.

தமிழக அரசு ஜனவரி 31-க்குள் (அதாவது இன்று ) உள் ஒதுக்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடந்த முடியாத நிலை ஏற்பட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இன்று நடைபெறும் பாமக நிர்வாகக்குழு கூட்டத்தில் பேசுவோம் என தெரிவித்தார்.

கூட்டணியை விட்டு விலகும் முடிவை பாமக எடுத்துவிடக் கூடாது என்பதற்காக  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை தைலாபுரம் தோட்ட இல்லத்தில் நேற்று இரவு அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் சந்தித்து பேசினர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இன்றைய பாமக நிர்வாகக்குழு கூட்டத்தில் பாமக கூட்டணி குறித்து இறுதி முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று தேமுதிக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கூட்டணி என்றால் பாமக இல்லாத கட்சியுடன் மட்டுமே கூட்டணி என பிரேமலதா விஜயகாந்த் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது அதிமுக பெரும் சிக்கலில் உள்ளது. ஏனென்றால் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு குறித்து எந்த முடிவையும் அறிவிக்கவில்லை என்றால் கூட்டணி பற்றி முடிவு செய்து அறிவிப்போம் என பாமக அறிவித்துள்ளது. அதேநேரத்தில் பாமக இல்லாத கட்சியுடன் மட்டுமே கூட்டணி என தேமுதிக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அதிமுக என்ன முடிவை எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

author avatar
murugan