திருச்சியில் சாமி தரிசனம் நிறைவு… அடுத்து ராமேஸ்வரம் புறப்பட்ட பிரதமர் மோடி!

இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலுக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். அப்போது, ரங்கா ரங்கா கோபுரம் முன்பு மேள தாளங்கள் முழங்க பிரதமர் நரேந்திர மோடிக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் தங்க குடத்தில் பூரண கும்ப மரியாதை அளித்து, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன்பின், கோயிலுக்குள் சென்ற பிரதமர் மோடி, உற்சவர் ரங்கநாதரை வழிபட்டார். அதன் பின்னர் கருடாழ்வார், மூலவர், தாயார், பெரிய பெருமாள், சக்கரத்தாழ்வார், பட்டாபிராமர், கோதண்டராமர், ராமானுஜர் உள்ளிட்ட முக்கிய சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். தாயார் சன்னதியில் நவராத்திரி கொலு மண்டபத்தில் அஷ்டலட்சுமி விளக்கேற்றி வழிபாடு செய்தார். அதன் தொடர்ச்சியாக தாயார் சன்னதி அருகாமையில் கம்பராமாயண அரங்கேற்ற மண்டபத்தில் தமிழறிஞர்கள் பாடும் கம்பராமாயண பாராயணத்தை மனம் உருகி கேட்டார்.

பிரதமர் மோடி தமிழகம் வருகை – 40 மீனவர்கள் விடுதலை.!

சாமி தரிசனத்தின் போது பிரதமர் தமிழ் கலாச்சார உடையான வேஷ்டி சட்டையில் இருந்தார். மேலும், கோயிலில் உள்ள ஆண்டாள் யானையிடம் பிரதமர் மோடி ஆசீர்வாதம் பெற்றார். அப்போது, பிரதமர் மோடியிடம் ’மவுத் ஆர்கன்’ வாசித்து காட்டி ஆண்டாள் யானை அசத்தியது. இதை பார்த்து அன்போடு தடவிக்கொடுத்து பிரதமர் மகிழ்ந்தார்.

இதனிடையே, பிரதமர் வருகையையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. அதுமட்டுமில்லாமல், பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் மலர்களை தூவி பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் நிறைவு செய்த பிரதமர் மோடி, அங்கிருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டார். ஹெலிகாப்டர் தளத்துக்கு வந்து பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் புறப்பட்டார்.

ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் மோடி, அங்குள்ள ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து 22 புண்ணிய நீர் தலத்திலும் நீராட உள்ளார். அதன் பிறகு, அங்கிருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு தீர்த்தம் எடுத்து செல்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து ராமநாதசுவாமி கோயில் வரை செல்லும் பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் கடும் அவதிகுள்ளாகியுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்