தமிழக கோயில்களில் 5 ஆண்டுகள் பணிபுரிவர்களுக்கு பணி நிரந்தரம் – அமைச்சர் சேகர்பாபு

தமிழக கோயில்களில் 5 ஆண்டுகள் பணிபுரிவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம், சமயபுரம் உள்ளிட்ட திருக்கோவில்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக கோயில்களில் 5 ஆண்டுகள் தற்காலிகமாக பணி புரிபவர்களின் பணி, ஒரு மாதத்திற்கு நிரந்தரம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்கள், வாடகைக்கு இருப்பவர்கள் அதை ஒத்துக்கொண்டு திருக்கோவிலுக்கு உரிய மனுவினை அளித்தால் அவர்களை வாடகைதாரர்களாக ஏற்று உத்தரவு வழங்கப்படும் என்றும் கொரோனாவில் இருந்து தமிழகம் விடுபட்டு நலம் பெற இறைவனை வேண்டுவோம் எனவும் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், புனரமைக்கப்படாமல் குடமுழுக்கு நடத்தப்படாமல் இருந்த கோவில்களை கண்டறிந்து புனரமைத்து குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் மீது வழக்குபதிவு செய்து, குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் சஸ்பென்ட் செய்யபடுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆட்சியில் 10 ஆண்டு காலம் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் குடமுழுக்கு மராமத்து பணிகள் நடக்காமல் இருந்ததற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், வைரஸ் தொற்று முடியும் வரை கோயில்களில் அன்னதானம் பொருளாக மட்டுமே வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் கோயில் சிலைகள் மாற்றப்பட்டதாக கூறப்படும் புகார்கள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்