திமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் – டிடிவி தினகரன்

திமுகவினர் அடாவடி தனத்தால் வரும் காலத்தில் ஆட்சிக்கு வரவிடாமல் மக்கள் தடுப்பார்கள் என டிடிவி தினகரன் விமர்சனம்.

வருங்காலத்தில் திமுக ஆட்சிக்கு வராமல் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், எடப்பாடி பழனிசாமியின் தவறான நடவடிக்கையால் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. பொய்யான வாக்குறுதி அளித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்துள்ளார். திமுக அமைச்சர்களின் ஆணவ பேச்சு தற்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. திமுகவை பொறுத்தவரை பொய்யான வாக்குறுதிகள் மற்றும் தமிழை வைத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளார்கள்.

ஒரு விபத்தில் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. திமுகவுக்கு ஏன் ஓட்டு போட்டோம் என மக்கள் சிந்திக்க தொடங்கிவிட்டனர். திமுகவினர் அடாவடி தனத்தால் வரும் காலத்தில் ஆட்சிக்கு வரவிடாமல் மக்கள் தடுப்பார்கள் என தெரிவித்தார். இதற்கு ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டு அபராதம் விதிக்கப்பட்ட அதே நிறுவனங்களிடமிருந்து நியாய விலைக் கடைகளுக்காக பருப்பு மற்றும் எண்ணெய் வாங்குவதற்கு முடிவு செய்துள்ள தி.மு.க அரசுக்கு கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தரமற்ற பொங்கல் பரிசை மக்களுக்கு அளித்த நிறுவனங்கள் மீது முதலமைச்சர் திரு.ஸ்டாலின் எடுப்பதாக சொன்ன கடும் நடவடிக்கை இதுதானோ?! என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இப்படி பச்சையாக முறைகேட்டில் ஈடுபடுபவர்களை ஊக்குவித்துக்கொண்டே ஊருக்கு ஊர், மேடைக்கு மேடை ‘நாங்கள் மட்டுமே உத்தமர்கள்’ என ஆட்சியாளர்கள் மார்தட்டிக்கொள்கிறார்கள் என கூறியிருந்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment