சசிகலா விவகாரத்தில் ஓபிஎஸ் சரியான கருத்தையே கூறியிருக்கிறார் – டிடிவி தினகரன்

தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியை உருவாக்க அதற்கான பயணம் தொடரும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேட்டி.

தஞ்சையில் மருது சகோதர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள் என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது சரியான கருத்து தான். ஓபிஎஸ் எப்போதும் நிதானமாக பேசுபவர்.

அவர், சரியான கருத்தை தான் கூறியுள்ளார். மனதில் பட்ட கருத்தைத் துணிந்து சொல்லியிருக்கிறார். அதிமுகவை மீட்டெடுப்பதே எங்களது இலக்கு. இயக்கத்தை மீட்டெடுப்பதற்காகவும், தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை ஏற்படுத்துவதற்காகவும் அமமுக உருவாக்கப்பட்டது.

தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியை உருவாக்க அதற்கான பயணம் தொடரும் என்றும் இந்த முயற்சியை எங்களது இறுதி மூச்சு உள்ளவரை தொடர்வோம் எனவும் தெரிவித்த டிடிவி,  அதிமுகவை நிச்சயமாக மீட்டெடுப்போம் என்றார்.

இதனிடையே, சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதி முக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அவர்களை ஏற்றுக்கொள்வது மக்களின் விருப்பம். சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்