ஆன்லைன் ரம்மி தடை சட்டம் – அமைச்சர் விளக்கம்

ஆளுநர் ஒப்புதல் அளித்தால் புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் என ஆன்லைன் ரம்மி அவசர சட்டம் காலாவதியானது பற்றி அமைச்சர் ரகுபதி விளக்கம்.

புதுக்கோட்டையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் ரம்மி அவசர சட்டம் காலாவதியானது பற்றி விளக்கமளித்தார். அவர் கூறுகையில், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கான நோக்கம் முகப்புரையிலேயே தெளிவாக கூறப்படுகிறது.

ஆன்லைன் ரம்மி என்பது ஒரு நோய், அதை ஒழிக்கவே பாடுபட்டு வருகிறோம். 95% மக்கள் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக அனைத்து பதில்களையும் ஆளுநரிடம் தமிழக அரசு அளித்துள்ளது.

ஆளுநர் ஏன் காலதாமதப்படுத்துகிறார் என்பது தெரியவில்லை, அதற்கான காரணம் ஆளுநருக்குத்தான் தெரியும். ஆன்லைன் ரம்மி சட்டம் பற்றி தெளிவான பதில்களை ஆளுநருக்கு அனுப்பி விட்டோம். ஆளுநரை கேள்வி கேட்கின்ற உரிமை எங்களுக்கு கிடையாது. ஆளுநர் கேள்வி கேட்டால் அதற்கு பதில் அளிக்கும் உரிமைதான் எங்களுக்கு உள்ளது என்றும் ஆளுநர் ஒப்புதல் அளித்தால் புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் எனவும் விளக்கமளித்தார்.

இதனிடையே, தமிழ்நாடு ஆளுநரை சந்திக்க சட்ட அமைச்சருக்கே அனுமதி கிடைக்காத நிலையில் உள்ளோம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னையில் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment