இனி தமிழகத்திலேயே ஆய்வு.. மத்திய அரசு அனுமதி – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

தமிழக மரபணு ஆய்வு கூடத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

இதுதொடர்பாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் செப்.14 சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையின் கீழ் இயங்கும் மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்தை மத்திய அரசின் அறிவியில் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (INSACOG) எனும் கூட்டமைப்பு கொரோனா மரபணு பகுப்பாய்வு கூடமாக இன்று அங்கீகரித்துள்ளது.

கொரோனா நோய் தொற்றினை உருவாக்கும் வைரஸ், அதன் மரபணுவில் உண்டாகும் தொடர் மாற்றங்களினால் புது வகையாக உருமாறி, நோய் தொற்றின் தாக்கத்தினை தீவிரப்படுத்துகிறது. ஒருமாறிய கொரோனா வைரஸ்களை கண்டறிய மரபணு பகுப்பாய்வகம் அவசியமாகும். இத்தகைய மரபணு பகுப்பாய்வகம், எந்த ஒரு மாநில அரசாலும் இதுவரை அமைக்கப்படவில்லை.

தமிழகத்தில் பரவும் கொரோனா வைரஸ்களின் உருமாற்றத்தினை கண்டறிய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள Instcam-Bangalore, CDFD-Hyderabad மற்றும் NIV-Pune இயங்கும் மரபணு பகுப்பாய்வகங்களில் கொரோனா மாதிரிகள் அனுப்பப்பட்டு, பகுப்பாய்வு முடிவுகள் தாமதமாக பெறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருந்த நிலையில், இன்று அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ்களை ஆரம்ப நிலையிலேயே விரைவாக கண்டறிந்து, அதனடிப்படையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, கொரோனா நோயின் தாக்கத்தினை பெருமளவு தடுத்திட இயலும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்