நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு!

Nomination: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல்கட்டமாக தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அந்தவகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் 20ம் தேதி தொடங்கிய நிலையில், நட்சத்திர வேட்பாளர்கள், சுயட்சைகள் என பலரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வந்தனர்.

காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்த வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது.

கடைசி நாளில் மனு தாக்கல் செய்ய பலரும் வந்ததால் 3 மணிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வாழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் மனு தாக்கலுக்கான நேரம் முடிந்த பின்னரும் வேட்புமனு வழங்க அனுமதிக்கப்படுவர். நேற்று முன்தினம் முகூர்த்த நாள் என்பதால் முக்கிய வேட்பாளர்கள் உள்பட பலரும் போட்டிபோட்டு வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் தாக்கல் செய்தனர்.

எனவே, நாளை வேட்புமனு பரிசீலினை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் பெற மார்ச் 30 கடைசி தேதியாகும்.  தமிழகம் முழுவதும் சற்று முன்பு வரை 834 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று வரை 700க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்