தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஓமைக்ரான் தொற்று இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஓமைக்ரான் தொற்று இல்லை என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க நாடுகளில் தற்பொழுது கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. ஓமைக்ரான் என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்கா மட்டுமல்லாமல் சிங்கப்பூர், இஸ்ரேல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கான கட்டுப்பாடுகளும் தற்பொழுது அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களிலேயே வெளிநாட்டிலிருந்து வரக்கூடிய பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

தற்பொழுது மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், தமிழகத்திலும் இதுவரை யாருக்கும் ஓமைக்ரான் பாதிப்பு  இல்லை. வெளிநாட்டில் இருந்து வந்த 477 பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் யாருக்கும் ஓமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

அவ்வாறு விமான பயணிகளிடம்  ஓமைக்ரான் கொரோனா கண்டறியப்பட்டால் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதுபோல ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் ஓமைக்ரான் தொற்று இருந்தால் அதனை கண்டறிய முடியும் என அவர் கூறியுள்ளார்.

author avatar
Rebekal