கர்நாடகாவில் இப்போதைக்கு ஊரடங்கு நீட்டிப்பு இல்லை – முதல்வர் எடியூரப்பா

கொரோனா பரவல் மேலும் அதிகரித்தால் மே 12ம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை கடந்து வருகிறது. ஏற்கனவே, மாநில முழுவதும் சில கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் எடியூரப்பா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், கொரோனா பரவல் மேலும் அதிகரித்தால் வரும் 12ம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து பரிசீலினை செய்யப்படும் என கூறி, இப்போதைக்கு ஊரடங்கு நீட்டிப்பு இல்லை என்றும் கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டிப்பது அல்லது முழு ஊரடங்கு குறித்த முடிவு பின்னர் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இப்போதைக்கு, கொரோனா நிர்வாகத்தில் உள்ள தடைகளை நீக்குவதில் மாநில அரசு கவனம் செலுத்துகிறது. இந்த நெருக்கடியை சமாளிக்க, 5 மூத்த அமைச்சர்களை நியமித்து அவர்களுக்கு குறிப்பிட்ட பொறுப்புகளை வழங்கியுள்ளோம். அதன்படி, ஜகதீஷ் ஷெட்டார் ஆக்ஸிஜன் மையங்களின் பொறுப்பாளராக இருப்பார்.

துணை முதல்வர் டாக்டர் சிஎன் அஸ்வத் நாராயண் மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளுடனும் ஒருங்கிணைந்து ரெம்டேசிவிர் மருந்து பற்றாக்குறை குறித்து கண்காணிப்பார். அமைச்சர்கள், பசவராஜ் பொம்மை, ஆர் அசோக் ஆகியோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளில் படுக்கைகளின் தேவை குறித்து கண்காணிப்பார்கள்.

மேலும், அரவிந்த் லிம்பாவாலி பிபிஎம்பி போர் அறைக்கு பொறுப்பாக இருப்பார் என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை ஒருங்கிணைக்க உடனடியாக தங்கள் மாவட்டங்களில் முகாமிடுமாறு அனைத்து மாவட்ட பொறுப்பான அமைச்சர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பு பணியில் இறுதி ஆண்டு நர்சிங் மற்றும் ஆயுஷ் மாணவர்களை கொண்டுவர மாநில அரசு முடிவு செய்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்