ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே என் விருப்பம் – சசிகலா

நான்கு ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு முதல் முறையாக இன்று  செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சசிகலா.

பெங்களூரில் இருந்து இன்று காலை சென்னைக்கு புறப்பட்ட சசிகலாவுக்கு வழியெங்கும் ஏராளமானோர் திரண்டு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த போது, கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, தமிழக மக்களின் அன்புக்கு நான் அடிமை.. கொண்ட கொள்கைக்கு நான் அடிமை என எம்.ஜி.ஆர் பாடல் வரிகளை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

கழகம் எத்தனையோ முறை சோதனைகளை சந்தித்துள்ளது. அப்போதெல்லாம் பீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்திருக்கிறது. புரட்சித் தலைவி வழி வந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே என் விருப்பம் என்று தெரிவித்துள்ளார். எந்த அடக்குமுறைக்கும் நான் அடிப்பணியமாட்டேன். மிக விரைவில் எல்லோரையும் சந்திக்கிறேன், அப்போது சொல்கிறேன் என கூறியுள்ளார். அதிமுக தலைமையகம் செல்வீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பொறுத்திருந்து பாருங்கள் என பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது ஏன் என்பது மக்களுக்குத் தெரியும் என்றும் நிச்சயமாக தீவிர அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன் எனவும் கூறியுள்ளார். அதிமுக கொடி பயன்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள் புகார் கொடுப்பது அவர்கள் பயத்தை காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார். சசிகலா 4 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு முதல் முறையாக தனது காரில் இருந்தபடியே செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்