ரூ.20,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தைக் கொண்டாடவும்,நாடு முழுவதும் கிராம சபைகளில் உரையாற்றவும் இன்று ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டம் பாலி பஞ்சாயத்துக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி,காஷ்மீரில் ரூ.20,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.

அடிக்கல் நாட்டிய பிரதமர்:

அந்த வகையில்,கிஷ்த்வார் மாவட்டத்தில் செனாப் ஆற்றில் கட்டப்படும் 850 மெகாவாட் ரேட்டில் நீர்மின் திட்டம் மற்றும் 540 மெகாவாட் குவார் நீர்மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.ரூ.3,100 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பனிஹால் காசிகுண்ட் சாலை சுரங்கப்பாதையை காணொலி மூலம் பிரதமர் திறந்து வைத்தார்.பின்னர்,ரூ.7500 கோடி மதிப்பில் டெல்லி-அமிர்தசரஸ்-கத்ரா எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

நான் வளர்ச்சி பற்றிய செய்தியுடன் வந்துள்ளேன்:

இதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர்:”ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சி பற்றிய செய்தியுடன் நான் இங்கு வந்துள்ளேன்.அதன்படி,வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையில், 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

பெரிய மாற்றம்:

சம்பா மாவட்டத்தில் உள்ள பாலியில் இன்று 500 கிலோவாட் திறன் கொண்ட சோலார் பவர் பிளான்ட் தொடங்கப்பட்டதன் மூலம்,கார்பன் நியூட்ரலாக மாறிய நாட்டின் முதல் பஞ்சாயத்து என்ற இடத்தை நோக்கி நகர்கிறது.இந்த ஆண்டு பஞ்சாயத்து ராஜ் தினம்,ஜம்மு-காஷ்மரில் கொண்டாடப்படுவது ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது.இங்கிருந்து உங்கள் அனைவருடனும் உரையாடுகிறேன் என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம்.

ஜனநாயகமாக இருந்தாலும் சரி,வளர்ச்சியாக இருந்தாலும் சரி,இன்று ஜம்மு காஷ்மீர் ஒரு புதிய முன்னுதாரணமாக திகழ்கிறது.கடந்த 2-3 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சியின் புதிய பரிமாணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன”,என்று கூறினார்.

முதல் முறை பயணம்:

இதனிடையே,ஜம்மு காஷ்மீர் மாநிலம் பள்ளிக்கு பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு,யூனியன் பிரதேசத்திற்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.