மிக்ஜாம் புயல் : இன்று மாலைக்குள் முக்கால்வாசி மீட்பு பணிகள் நிறைவுபெரும்.! அமைச்சர் KKSSRR பேட்டி.!

சென்னையில் மிக்ஜாம் புயலின் தாக்கம் சற்று குறைந்து உள்ளது. புயலானது தற்போது சென்னையை விட்டு விலகி ஆந்திர மாநில கடற்கரையை நோக்கி சென்றுவிட்டது.  இன்று முற்பகல் ஆந்திர பிரதேசம் பாபட்லா கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி மிக்ஜாம் புயலானது வடக்கு நோக்கி நகர்ந்து உள்ளது.

மிகஜாம் புயல் சென்னையை கடந்து சென்றும், புயலின் தாக்கம் தலைநகர் சென்னையை வெகுவாக பாதித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை விட இந்த ஆண்டு அதிக அளவு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயலின் தற்போதைய நிலை…  வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்.! 

இதனால் மழைநீர் வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து இன்று பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிடுகையில், விரைவாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

மீட்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள் நேற்று இரவு புதிதாக வந்துள்ளனர். அவர்கள் மூலம் முழு வீச்சில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என எந்த பகுதியாக இருந்தாலும் பள்ளமான பகுதியில் அதிகமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மழை நீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழை நீடிக்கும்.! வானிலை ஆய்வு மையம் தகவல்.! 

இன்று மாலைக்குள் பெரும்பாலான இடங்களில் மழை நீர் அகற்றப்பட்டு விடும். கடல் அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாக, மழைநீர் நீர்நிலைகளில் திருப்பி விடப்படுகிறது. இதனால் மழைநீர் வெளியேற்றுவதில் சற்று தாமதம் நிலவுகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மீட்பு பணிகளுக்காக வெளியூரில் இருந்தும் ஊழியர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மூலமாகவும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், எதிர்பார்த்த அளவைவிட 12 மடங்கு மழை அளவு அதிகமாக பெய்துள்ளது. இதன் காரணமாக மழை நீர் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ளது. தற்போது மீட்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருவதால் பல்வேறு இடங்களில் இயல்பு நிலை திரும்பி உள்ளது. ஒரு சில இடங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக அங்கு மீட்பு பணிகள் சற்று தாமதமாகியுள்ளது. விரைவில் அதுவும் சரி செய்யப்பட்டுவிடும். மின்வினியோகம் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.