“அமைச்சரே…வந்தனா வீட்டிற்கு செல்லுங்கள்;இதுவே இந்தியாவின் அவமானத்தை துடைக்கும்” – எம்பி சு.வெங்கடேசன் கொந்தளிப்பு ..!

இந்தியாவின் செல்ல மகள் வந்தனா! இழிவை நீக்கி புகழை மீட்போம் என்று எம்பி சு.வெங்கடேசன் அவர்கள்,மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்  அனுராக் சிங் தாக்கூருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முன்னதாக நடைபெற்ற ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா அணியிடம் இந்திய மகளிர் அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.இதனால்,வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் பிரிட்டன் அணியுடன் இந்திய மகளிர் அணி போராடி தோற்றது.

சாதி ரீதியாக கிண்டல்:

இதற்கிடையில்,அரையிறுதி போட்டியில் தோற்றதால் உத்தரகாண்டின் ஹரித்துவார் மாவட்டத்தில் உள்ள வந்தனா கட்டாரியாவின் வீட்டின் முன்பு,மாற்று சாதியை சேர்ந்த இரு நபர்கள் வந்து நின்று நடனமாடி, கிண்டல் செய்து, பட்டாசுகளை வெடித்தனர்.அதுமட்டுமல்லாமல்,இந்த சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த வந்தனாவின் குடும்பத்தினரிடம், இந்திய அணி தோற்றதற்கு அதிகமான தலித் பிரிவினரை அணியில் சேர்த்ததுதான் காரணம் எனக் கூறி அவதூறு சொற்களைக் கூறி திட்டிச் சென்றனர்.

வழக்கு :

இதனையடுத்து,நடந்த சம்பவம் குறித்து வந்தனாவின் சகோதரர் போலீஸாரிடம் புகார் தெரிவிக்க,இருவரையும் போலீஸார் கைது  செய்தனர்.அதில்,ஒருவர் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ஹாக்கி வீரரான விஜய் பால் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் இருவர் மீதும் ஐசிபி 504, எஸ்சி,எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பதிலடி:

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வந்தனா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:”புத்தரின் ஞானமும்,அம்பேத்கரின் நிலைத் தன்மையும்,கான்ஷி ராமின் தைரியமும் என்னுள் உள்ளது.இதனால்,நான் தலித் ஆக இருப்பதில் பெருமை அடைகிறேன்.மேலும்,ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையாகவும்,தைரியமாகவும் இருக்கிறேன்”,என்று தெரிவித்தார்.

மேலும்,அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த சம்பவத்திற்கு எதிராக இணையத்தில் பலரும் கடுமையாக குரல் எழுப்பி வருகின்றனர்.

கடிதம்:

இந்நிலையில்,வந்தனாவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தமிழக எம்பி சு.வெங்கடேசன் அவர்கள்,வந்தனா வீட்டிற்கு விளையாட்டு துறை அமைச்சர் நேரில் சென்று தேசம் உன் பின்னால் நிற்கிறது என்று சொல்லுங்கள்.இதுவே இந்தியாவின் அவமானத்தை துடைக்கும் என்று தெரிவிக்குமாறு,மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்  அனுராக் சிங் தாக்கூருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தலித்துகளை வெளியே அனுப்ப கூச்சல் – அநீதி:

“டோக்கியோ ஒலிம்பிக்கில் அரை இறுதி ஆட்டம் வரை அழைத்து சென்ற இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் உறுப்பினர் வந்தனா கட்டாரியா வீட்டின் முன்பு சாதி இந்துக்கள் அநாகரிக நடனம்… பட்டாசு வெடிப்பு… அணியில் அதிகம் தலித்துகள் என்பதால் அரை இறுதி ஆட்டத்தில் தோல்வி என சாதி ரீதியான வசவுகள்… எல்லா விளையாட்டுகளில் இருந்தும் தலித்துகளை வெளியே அனுப்ப வேண்டுமென்று கூச்சல்… உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவார் ரோஷனாபாத் என்ற கிராமத்தில் இந்தியாவின் செல்ல மகள் வந்தனா குடும்பத்தினருக்கு இழைக்கப்பட்ட அநீதி…

முன்னாள் சாம்பியன்:

இதே போட்டியில் மூன்று முறை தங்கம் வென்ற முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இதே அணிதான்.கால் இறுதி போட்டிக்கு இந்தியாவை தகுதியாக்கிய தென் ஆப்ரிக்காவுடனான போட்டியில் ஹாட் ட்ரிக் கோல் அடித்து சாதனை புரிந்து வெற்றிக்கு பங்களித்தது வந்தனாதான்.

குறைந்த – இந்தியாவின் மதிப்பு:

உலகம் முழுவதுமுள்ள மக்கள் குறிப்பாக விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் இந்தியாவின் மதிப்பை குறைத்துள்ளது.தேசத்திற்காக விளையாடும் பெருமை மிக்க வீரர்கள் மனதை இரணமாக்கியுள்ளது.

நெஞ்சு விம்முகிறது:

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சரே.விரைந்து அவமானத்தை சரி செய்யுங்கள்,நம்பிக்கையை விதையுங்கள்.

இம்முறை இந்திய பெண்கள் ஹாக்கி அணி நாடு முழுக்க பெரும் எழுச்சியை உருவாக்கியது. இந்த எழுச்சியை உருவாக்கிய பெண்கள், மிக எளிய பின்னணியிலிருந்து வந்தவர்கள். வேளாண் குடும்பம், வீட்டில் மகள் ஆடுவதை பார்க்க சரியாக ஒரு தொலைகாட்சி கூட இல்லாத குடும்பம், போட்டிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு தந்தையை இழந்த ஒரு வீராங்கனை, குடிக்கு அடிமையான தந்தை தந்த மனவுளைச்சலை மீறி டோக்கியோவில் வெற்றியை நிலை நாட்டிய இன்னொரு வீராங்கனை என்று இவர்களது கதைகளை கேட்க கேட்க நெஞ்சு விம்முகிறது.

அரசு?:

இந்த வீராங்கனைகளை நாம் சரியாகதான் கொண்டாடுகிறோமா என்கிற சந்தேகம் எழுகிறது. தேசம் கொண்டாடுகிறது. மக்கள் கொண்டாடுகிறார்கள்.ஆனால்,அரசு? அந்த அணியின் ஒவ்வொரு உறுப்பினரும் அரசால் பெருமை செய்யப்பட்டு உற்சாகப்படுத்தப்பட வேண்டும். அரசு அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ 1 கோடி சிறப்பு பரிசை அறிவிக்க வேண்டும்.

  • குற்றவாளிகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு உத்தரகாண்ட் மாநில முதல்வருக்கு கடிதம் எழுதுங்கள்.
  • நாடு திரும்பும் இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு பெரிய பாராட்டு விழா நடத்துங்கள்.
  • வந்தனா வீட்டிற்கு நீங்களே நேரில் சென்று தேசம் உன் பின்னால் முழுமையாக நிற்கிறது என்று சொல்லுங்கள்”, என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும்,வந்தனாவுக்கு நீதி கிடைக்க எல்லோரின் குரலும் ஒரு சேர எழும்பட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.