#IPL2022: பிளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்த சென்னை.. 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது. இதன்மூலம் சென்னை அணி, பிளே ஆப்ஸ் அணிக்கு தகுதி பெறுவதற்கான கடைசி வாய்ப்பையும் இழந்தது.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது நடைபெற்று வரும் 59-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகிறது. வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 16 ஓவர்களில் தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து 97 ரன்கள் எடுத்தது.

98 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் – ரோஹித் சர்மா களமிறங்கினார்கள். இதில் 6 ரன்கள் எடுத்து இஷான் கிஷன் தனது விக்கெட்டை இழக்க, 18 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா வெளியேறினார். அவரையடுத்து களமிறங்கிய டேனியல் சாம்ஸ் 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேற, ட்ரிஸ்டன் டக் அவுட் ஆனார்.

பின்னர் களமிறங்கிய ஹ்ரித்திக் நிதானமாக ஆடி 18 ரன்கள் குவித்து வெளியேறினார். இறுதியாக மும்பை அணி, 14.5 ஓவர்கள் முடிவில் 104 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. மேலும், இந்த தோல்வியின் மூலம் சென்னை அணி தனது பிளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்தது. அதுமட்டுமின்றி, ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சென்னை – மும்பை அணிகள் இல்லாத பிளே ஆப்ஸ் சுற்று நடைபெறவுள்ளது.