மேகதாது அணை விவகாரம்;அனைத்து கட்சி கூட்டம் தேவை – ஓபிஎஸ் கோரிக்கை…!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் தேவை என்று ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதனையடுத்து,பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கூறுகையில்,”மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர் தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஒன்று திரண்டு நிற்க வேண்டும்.மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா தீவிரமாக இருக்கிறது. தேவைப்பட்டால் தமிழ்நாடு ஒரே குரலில் எழுந்து நிற்கிறது என்பதைத் தெரிவிக்க அடையாள போராட்டத்தை அறிவிக்கலாம்” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து,மேகதாது அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு பாஜக எதிர்க்கும்,குறிப்பாக தமிழ்நாடு அரசுக்கு துணை நிற்கும் என்று தமிழக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் காந்தி கூறியுள்ளார்.

இந்நிலையில்,மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன்,”மேகதாது விவகாரத்தில் கட்சி வித்தியாசம் இல்லாமல் இப்போது இருப்பது போல் எப்போதும் இருந்தால் மேகதாது பிரச்னையில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.நாம் ஒன்றுபட்டு இருந்தால் எந்த சக்தியாலும் நம்மை வீழ்த்த முடியாது”,என்று தெரிவித்துள்ளார்.