தனது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட எண்ணி வாளால் கேக் வெட்டிய நபர் கைது!

திருப்பூரில் தனது பிறந்தநாளுக்கு வித்தியாசமாக கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் வாளால் கேக் வெட்டி கொண்டாடிய சதீஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே வாள் வைத்து பிறந்தநாள் கேக் வெட்டுவது வழக்கமாகிவிட்டதுடன், இது வன்முறையை தூண்டும் விதமாக இருக்கிறது என போலீசார் எச்சரிக்கை செய்வதும், தவறு எனவும் சுட்டிக் காட்டப்பட்டும் வருகிறது. மேலும், தொடர்ந்து அவ்வாறு செய்யக் கூடியவர்கள் கைது செய்யப்பட்டும் வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தினை சேர்ந்த சதீஷ் என்பவருக்கு கடந்த திங்கட்கிழமை நண்பர்கள் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவரது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட விரும்பிய அவரது நண்பர்கள் 20க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடி சதீஷ்க்கு கேக்குகள் வாங்கி அவரை வாளால் கேக் வெட்ட கேட்டுள்ளனர். அவரும் வாள் வைத்து தைரியமாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். ஆனால் கூடியிருந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூச்சலிட்டு அந்த இடத்தில் மிகவும் கும்மாளம் போட்டுக் கொண்டிருப்பதை அருகில் இருந்தவர்கள் எச்சரித்தும் கேட்காத நிலையில், சிலர் மாடியிலிருந்து வாளால் கேக் வெட்டியதை போட்டோ எடுத்து அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பிறந்தநாளுக்கு கேக் வெட்டிய சதீஷை கைது செய்துள்ளனர்.

author avatar
Rebekal