“மக்களே கவனமாய் இருங்கள்” – எம்பி சு.வெங்கடேசன் எச்சரிக்கை!

மதுரை:வைகை அணையிலிருந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்படுவதால் அதனை ஒட்டியுள்ள கரையோர மக்கள் கவனமாய் இருக்கவும் என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் எச்சரித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதனால்,தமிழகத்தில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. அந்த வகையில்,வைகை அணை நிரம்பும் நிலையில் இருப்பதால் அணையிலிருந்து 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.இதனால், தேனி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களுக்கு 3 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,வைகை அணையை ஒட்டியுள்ள கரையோர மக்கள் கவனமாய் இருக்கவும் என்று மதுரை எம்பி.சு வெங்கடேசன் அறிவுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“வைகை அணையின் நீர் திறப்பு 3000 கண அடியாக அதிகரித்துள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 69.29 அடியாக இன்று காலை உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 3569 கண அடியாக உள்ளதால் ஆற்றில் வெள்ளமாக 3000 கண அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால்,கரையோர மக்கள் கவனமாய் இருக்கவும்”,என்று குறிப்பிட்டுள்ளார்.