தமிழ்நாடு
விஷச்சாராய தடுப்பு குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.!
சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு இதுவரை 50 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டவிரோதமாக விஷச்சாராயம் தயாரித்து விற்றதாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு தற்போது அவர்கள் நீதிமன்ற காவலில் உள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உய்ரநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவானது இன்று, நீதிபதி கிருஷ்ணகுமார், குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கு தொடர்ந்த அதிமுக சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் செல்வம், கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதன் பயன்பாட்டை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது. விஷச்சாராயம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மெத்தனால் புதுச்சேரியில் இருந்து மீட்கப்பட்டது அதனால், மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னை இதில் எழுகிறது, எனவே இந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரிப்பதே சரியானது என்று அவர் வாதிட்டார்.
தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் கமிஷனை தமிழக முதல்வர் நியமித்துள்ளார் என்று கூறினார்.
இதனை அடுத்து நீதிபதி அமர்வு கூறுகையில், இது மற்ற வழக்குகளை போல சாதாரண பிரச்சினை இல்லை. இது அதிகாரிகளின் செயலற்ற தன்மையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கை பற்றியது. இதற்கு அரசு பதில் சொல்ல வேண்டும். இதுகுறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
கடந்த ஓராண்டில் இதுபோன்ற சம்பவம் நடந்தபோது, அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை நீதிமன்றத்தில் அரசு கூற வேண்டும். கள்ளக்குறிச்சியில் சட்டவிரோதமான விஷச்சாராயம் எப்படி எளிதாகக் கிடைக்கின்றன.?
இந்தச் சம்பவங்களைத் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள், எந்தெந்த அரசு அதிகாரிகளை இடைநீக்கம் மற்றும் இடமாற்றம் செய்துள்ளீர்கள் என்ற விவரங்களை அரசு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். மேலும் தமிழகத்தில் செயல்பட்டு வரும் போதை ஒழிப்பு மையங்களின் விவரங்களையும் இதில் குறிப்பிடப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு இந்த வழக்கை வரும் புதன்கிழமைக்கு (ஜூன் 26) ஒத்திவைத்தது சென்னை உய்ரநீதிமன்ற நீதிபதி அமர்வு.
![](https://dinasuvadu.com/wp-content/uploads/2023/12/Dinasuvadulogo2000PxBy200Px.png)