சிறையில் இருந்து கொண்டு ஒருவரால் வாக்களிக்க முடியுமா.?

Election2024 : சிறைவாசிகள் இந்திய தேர்தல் சட்டத்தின் படி வாக்களிக்க தகுதி இல்லாதவர்கள் ஆவார்.

இந்தியாவில் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கும் நாளை (ஏப்ரல் 19) முதல் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதற்கான பூத் சிலிப் வழங்கும் வேலைகள், வாக்காளர்கள் எங்கு சென்று வாக்களிக்க உள்ளனர் என்ற விவரங்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. வாக்குசாவடி தயார் செய்யும் வேலைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மூத்த குடிமக்கள், தேர்தல் வேளைகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் ஆகியோர் தங்கள் வாக்குகளை தபால் வாக்குகளாக அளித்துள்ளனர்.  அந்தப்பணிகள் நாளை தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் கால அவகாசம் அளித்து நடைபெற்று வருகிறது.

அதே போல சிறையில் இருப்பவர்கள் வாக்களிக்கலாமா என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழும். அதற்கான சட்டப்பூர்வ விடை,  மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951இன் பிரிவு 62(5) இன் படி, போக்குவரத்து விதிமீறல்கள் அல்லது மற்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு சிறைத் தண்டனை பெற்று வருபவர்கள், வழக்குகளில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, காவல்துறையின் சட்டப்பூர்வ காவலில் இருக்கும் எந்தவொரு நபரும் தேர்தலில் வாக்களிக்கக் கூடாது என்பது விதியாகும். அந்த நபரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று இருக்கும்.

இருப்பினும், தண்டனை பெறாத விசாரணை கைதிகள் சிறையில் இருந்து கொண்டு சிறை கண்காணிப்பாளரிடம் இது தொடர்பான கோரிக்கை முன்வைக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் சிறைக்கைதி வாக்களிக்கும் பகுதியின் தேர்தல் அலுவரின் அனுமதி பெற்று தபால் வாக்கு அளிக்கலாம் என்றும், அதற்கு முன்கூட்டியே அனுமதி பெற்று இருக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.