உள்ளாட்சித் தேர்தல் : கட்டுப்பாடுகளை விதித்த தேர்தல் ஆணையம்

  • ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
  • உள்ளாட்சி தேர்தலில் கொடிகள், சின்னங்கள் வரைதல் தொடர்பான வழிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது  

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது .தேர்தல் பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் கொடிகள், சின்னங்கள் வரைதல் தொடர்பான வழிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

 

இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில்,உள்ளாட்சித்  தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்றிடவும், தேர்தல்  நடத்தை விதிகளின்படி பொது இடங்களில் வேட்பாளா்கள், அரசியல் கட்சிகள் தேர்தல்  தொடா்பான பதாகைகள், கொடிகள், சின்னங்கள் வரைதல் மற்றும் சுவரொட்டிகள் ஒட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,தமிழ்நாடு திறந்த  வெளிகள் சட்டம் 1959-ல் பாா்வையில்படும் பொது இடங்கள் என்பது  ஒரு பொது இடத்தில் இருக்கும்  அல்லது கடந்து செல்லும் ஒரு நபரின் பார்வையில்படும் தனியார் இடம் / கட்டிடம் அடங்கும். இத்தகைய இடங்களில் உரிமையாளா்களின் அனுமதி இருந்தாலும்  சுவரொட்டி, சுவரில் எழுதுவதற்கு  தடை விதிக்கப்படுகிறது.

ஒரு இடத்தின் உரிமையாளரது ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்ற காரணத்தின் அடிப்படையில் எந்தச் சூழ்நிலையிலும் சுவரில் எழுதுவதோ அல்லது  சுவரொட்டி ஒட்டுவதோ கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.