#Breaking:மாநிலங்களவையில் அவைத் தலைவர் வெங்கையா நாயுடு கண்ணீர் – மாநிலங்களவை ஒத்திவைப்பு…!

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் தொடர் அமளி காரணமாக அவைத் தலைவர் வெங்கையா நாயுடு கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 19 ஆம் தேதியன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்து பெகாசஸ் விவகாரம் மற்றும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால்,அனைத்து நாட்களிலும் நாடாளுமன்றம் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில்,நேற்று மக்களவையில் ஓபிசி மசோதா மீதான விவாதம் நடந்து கொண்டிருந்தபோது,மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டது.விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக குறுகிய கால விவாதம் நடத்தலாம் என அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். ஆனால்,காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி ஜெயராம் ரமேஷ், இதுகுறித்து,நான் கவன ஈர்ப்பு தீர்மானம் முன்னதாக அளித்ததை சுருக்கி குறுகிய கால விவாதமாக மாற்றியது தவறு என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனையடுத்து,எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பி அவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டனர். அப்போது,காங்கிரஸ் எம்.பி பிரசாத் பாஜ்வா ஒரு மேஜையின்மீது ஏறி ஒரு புத்தகத்தை கிழித்து எறிந்தார்.

இந்நிலையில்,மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளியைக் கண்டித்து அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:

“நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில்,ஆனால்,சில மாநிலங்களவை உறுப்பினர்கள் மேஜைகளில் அமர்ந்ததும், சிலர் மேஜைகளில் ஏறியதன் காரணமாக அதன் அனைத்து புனிதமும் நேற்று அழிக்கப்பட்டது.

இதனால்,நேற்று இரவு என்னால் உறங்ககூட முடியவில்லை,இது போன்ற அவையை நான் நடத்த விரும்பவில்லை,மேலும்,இவ்வாறு செய்வது சரியல்ல”, என்று அவையை 12 மணி வரை ஒத்தி வைத்தார்.

இதற்கிடையில்,மக்களவை கூட்டத் தொடர் ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ள நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே முடித்து கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில்.மக்களவையில் “adjourned sine die” என்ற வார்த்தையை தெரிவித்து,தேதி குறிப்பிடப்படாமல் மக்களவை தலைவர் ஓம் பிர்லா ஒத்தி வைத்துள்ளார்.