லக்கிம்பூர் வன்முறை: “எனது மகனுக்கு உடல்நிலை சரியில்லை; நீதிமன்றத்தில் நாளை ஆஜாராவார்” – மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா..!

லக்கிம்பூர் வன்முறை குறித்து சம்மன் அனுப்பட்டது தொடர்பாக எனது மகன் நாளை காவல்துறை முன்பு ஆஜராவார் என்று மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 3 ஆம் தேதி காலை உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்தனர். அப்போது மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் பேரணியாக சென்று கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அமைச்சரின் மகன் சென்ற வாகனம் விவசாயிகள் மீது மோதியதாக கூறப்படுகிறது.

மத்திய அமைச்சர் மகன் மீது வழக்குப்பதிவு:

பின்னர், ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள் 4 பேர், பொதுமக்கள் 4 பேர் , பத்திரிகையாளர் ஒருவர் என 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில்,லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி:

இதனையடுத்து,இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும்,வன்முறை தொடர்பான அறிக்கை  தாக்கல் செய்யப்படவேண்டும் என்றும் உத்தரபிரதேச அரசுக்கு நேற்று கேள்வி எழுப்பியிருந்தது.

சம்மன்:

இதனைத் தொடர்ந்து,லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகனின் ஆதரவாளர்கள் இரண்டு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.மேலும்,போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை மோதிய சம்பவத்தில் மேலும்,3 பேரிடம் உத்தரப்பிரதேச காவல்துறை விசாரணை நடத்தினர்.இதனைத் தொடர்ந்து,மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனை உடனடியாக விசாரணைக்கு ஆஜராகுமபடி போலீஸ் தரப்பில் இருந்து நேற்று, ‘சம்மன்’ அனுப்பப்பட்டது.எனினும்,அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தலைமறைவு:

ஆனால்,ஆஷிஷ் மிஸ்ரா அடிக்கடி இடத்தை மாற்றிக்கொண்டு இருப்பதாகவும்,போனை மாற்றிக்கொண்டு இருப்பதாகவும் உத்தர பிரதேச போலீசார் தெரிவித்தனர்.இவரை பிடிக்க பல்வேறு தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர்.இதற்கிடையில்,இவர் நேபாளத்தில் பதுங்கி இருக்கலாம், அங்கே தலைமறைவாகி இருக்கலாம் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

எனது மகனுக்கு உடல்நிலை சரியில்லை:

இந்நிலையில்,சம்மன் அனுப்பட்டது தொடர்பாக எனது மகன் நாளை காவல்துறை முன்பு ஆஜராவார்.ஏனெனில்,தற்போது அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,லக்கிம்பூர் விவசாயிகள் போராட்டத்தில் கார் மோதி 8 பேர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் மீது சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பதற்றமான நேரத்தில் உ.பி.அரசின் நடவடிக்கை திருப்திகரமானதாக இல்லை. விசாரணையை மற்றொரு அமைப்பு ஏற்கும் வரை ஆதாரங்களை போலீசார் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.