#BREAKING: 68 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியாவை மீண்டும் வாங்கும் டாடா ..!

டாடா குழுமத்துக்கு ஏர் இந்தியா விமானம் விற்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜே.ஆர்.டி.டாடா தொடங்கிய டாடா ஏர்மெயில், டாடா ஏர் லைன்ஸாக மாறியபின் ஏர் இந்தியாவாக உருவாகியது. இந்தியாவின் முதல் விமான நிறுவனமான ஏர் இந்தியாவுக்கும், டாடா நிறுவனத்துக்கும் உள்ள தொடர்பு 1932ல் தொடங்கியது. 1932ல் டாடா ஏர் சர்வீஸ் என்ற பெயரில் இந்தியாவின் முதல் பயணிகள் விமான சேவையை ஜே.ஆர்.டி.டாடா தொடங்கினார்.

முதல் விமானத்தை ஜே.ஆர்.டி.டாடாவே கராச்சியிலிருந்து மும்பை நகருக்கு 1932ல் அக்.15ஆம் தேதி தானே ஒட்டி வந்தார். அதுபோல், மும்பையில் இருந்து முதல் விமானத்தை சென்னைக்கு டாடாவின் நண்பரான நெவில் வின்சென்ட் ஒட்டி வந்தார் என கூறப்படுகிறது. டாடா ஏர் சர்வீஸ் என்ற பெயரை 1938ல் டாடா ஏர்லைன்ஸ் என்று ஜே.ஆர்.டி.டாடா மாற்றினார்.

இரண்டாம் உலகப்போருக்கு பின் 1946 ஜூலை 29ல் டாடா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியா என்று பெயர் மாற்றப்பட்டது. இந்தியா விடுதலை பெற்ற பின் 1948ல் ஏர் இந்தியாவின் 49% பங்குகளை இந்தியா அரசு வாங்கிய பின்னர் 1953ல் ஏர் கார்ப்பரேஷன் சட்டத்தை இயற்றிய மத்திய அரசு, ஏர் இந்தியாவின் பெரும்பான்மை பங்குகளை வாங்கியது.

ஏர் இந்தியா நிறுவனத்தை அரசு கையகப்படுத்திய பிறகும் அதன் தலைவராக ஜே.ஆர்.டி.டாடா தலைவராக தொடர்ந்தார். வெளிநாட்டு விமான சேவை நிறுவனம் ஏர் இந்தியா என்றும் உள்நாட்டு சேவை நிறுவனம் இந்தியா ஏர்லைன்ஸ் என்றும் பிரிக்கப்பட்டது. தற்போது ஏர் இந்தியா நிறுவனம் கடும் நஷ்டத்தில் இயங்கி வந்ததால் அதை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்தது.

இந்நிலையில், டாடா குழுமத்துக்கு ஏர் இந்தியா விமானம் ரூ.18 ஆயிரம் கோடிக்கு விற்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ரூ.70 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனம் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா தனியார் மயமாக்கலை மத்திய அமைச்சர்கள் குழு இறுதி செய்ததாக மத்திய அரசு செயலாளர் அறிவித்துள்ளார். இதனால், டாடாவிடம் இருந்து வாங்கிய ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் டாடாவுக்கே மத்திய அரசு68 ஆண்டுகளுக்கு பிறகு விற்றுள்ளது.

author avatar
murugan