கோடநாடு கொலை, கொள்ளை – ஆறுமுக சாமியின் மகன் செந்தில் குமாரிடம் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுக சாமியின் மகன் செந்தில் குமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-இல் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக,முக்கிய குற்றவாளி கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில்,கேரளாவைச் சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்து இருந்தனர்.இவர்கள் தற்போது ஜாமீனில் உள்ளனர்.

அதே சமயம், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோடநாடு வழக்கு தொடர்பாக கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் தனிப்படை போலீசார் நடத்தி வரும் விசாரணை தீவிரமடைந்தது. இந்த வழக்கில் விசாரணை நடத்தக் கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படைகள் அமைக்கப்பட்டு,கோடநாடு வழக்கு தொடர்பாக 220 பேரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில்,அறிக்கை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுக சாமியின் மகன் செந்தில் குமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக ஆட்சியில் மாநிலம் முழுவதும் ஆறுகளில் மணல் எடுக்கும் ஒப்பந்தத்தை பெற்றவர் ஆறுமுக சாமி; அதிமுக தலைமைக்கு நெருக்கமானவராக இருந்தவராகவும் கூறப்படுகிறது.

செந்தில் பேப்பர் நிறுவனத்திலிருந்து வருமானவரித்துறை 2017ம் ஆண்டில் எடுத்த ஆவணங்கள் கோடநாடு பங்களாவிலிருந்து திருடப்பட்டதா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment