#JustNow: 10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு – பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை!

10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களை அமைக்கலாமா? என்பது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை.

நாட்டில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்ததை தொடர்ந்து, அனைத்து பகுதிகளிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அந்தவகையில், தமிழகத்திலும் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்ததால், பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து, பிப்.1 முதல் பள்ளிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனிடையே, தற்போது டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில், முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் குறைந்து இருந்த கொரோனா, சற்று படிப்படியாக அதிகரித்து வருவதால், முகக்கவசம் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற மருத்துவத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இருப்பினும், பதற்றம் தேவையில்லை என்றும் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. 10, 11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கண்காணிப்பு பணிகளுக்கு 38 மாவட்டங்களுக்கும் தனித்தனி அதிகாரிகளை நியமித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையடுத்து, 10, 11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் ஹால்டிக்கெட்டுகளும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் சமீபத்தில் வெளியிட்டது. ஒருபக்கம் கொரோன பரவல் மீண்டும் தலைதூக்க, மறுபக்கம் பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுத்தேர்வுகள் நடத்தப்படுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என கேள்விகள் எழுந்துள்ளது.

இந்த நிலையில், மீண்டும் உயரத் தொடங்கியிருக்கும் கொரோனா தொற்றால், பரவலாக அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் 10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களை அமைக்கலாமா? என்பது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்