ஜெயலலிதா இந்த வீட்டை வைத்து அரசியல் செய்தது இல்லை – ஜெ.தீபா..!

அதிமுக என்பது மிகப்பெரிய அரசியல் கட்சி அதிமுகவுக்கு செய்ய வேண்டிய பணிகள் எத்தனையோ இருக்கு என ஜெ.தீபா தெரிவித்தார்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை அரசுடமையாக்கப்படும் என கடந்த ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனை எதிர்த்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் கடந்த 24 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், வேதா இல்லத்தை  அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது, மூன்று வாரத்தில் வேதா இல்லம் தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, வேதா இல்லத்தின் சாவியை தங்களிடம் ஒப்படைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் தீபா, தீபக் மனு அளித்தார்.

இந்நிலையில், இன்று வேதா நிலைய நினைவு இல்லத்தின் சாவியை ஆட்சியர் விஜயா ராணி தீபா, தீபக்கிடம் ஒப்படைத்துள்ளார். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெ.தீபா பேட்டியளித்த போது, இது சட்டப்போராட்டம் கிடையாது. உரிமை போராட்டம். இது சாதாரண வெற்றி கிடையாது. ரொம்ப பெரிய வெற்றி, ரொம்ப மகிழ்ச்சி. இந்த வீட்டிற்குள் ரொம்ப வருடம் கழித்து வருகிறேன் என்பதை நினைக்கும்போது ரொம்ப சந்தோசமாக உள்ளது.

அவர்கள் இருக்கும் போதே வந்திருந்தால் இன்னும் ரொம்ப சந்தோசம்பட்டு இருப்பான். முதற்கட்டமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது தான் எங்கள் கடமை. அடுத்தகட்டமாக இங்கு என்னென்ன செய்யவேண்டிய சட்ட ரீதியானபணிகள் பாக்கியுள்ளன அதை செய்ய வேண்டும். இது என்னைக்கும் என்னோட அத்தை வீடுதான். எப்போவும் அவர்களை பக்கத்தான் இங்க வருவான். ஜெயலலிதா இல்லாமல் இந்த வீட்டிற்கு வருவது இதுவே முதல் முறை.

அதிமுக என்பது மிகப்பெரிய அரசியல் கட்சி அதிமுகவுக்கு செய்ய வேண்டிய பணிகள் எத்தனையோ இருக்கு. அதை எல்லாம் மேற்கொண்டு அரசியல் பணி செய்யலாம். இது அறிவுரை இல்ல. பொதுக் கருத்து என தெரிவித்தார். ஜெயலலிதா அவர்கள் இந்த வீட்டை வைத்து அரசியல் செய்தது இல்லை. அதை விட்டுவிட்டு இதுதான் வேண்டும் என்று போராட்டம் நடத்தினால் சட்டரீதியாக சந்திக்க நாங்கள் தயார் என கூறினார்.

author avatar
murugan