ஜெ.மரணம் – இன்று முதல் 3 நாட்கள் அப்பல்லோவிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவர்களிடம் இன்று முதல் 3 நாட்கள் மறுவிசாரனையை ஆறுமுகசாமி ஆணையம் நடத்த உள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பாக விசாரிக்க கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்  தமிழக அரசு ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.

அதன்படி,ஜெயலலிதா மரணம் தொடர்பாக 150-க்கும் மேற்பட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இதனையடுத்து,3 ஆண்டுகளுக்கு பின் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணையை தொடங்கிய நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும்  சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது.

சசிகலா மட்டுமே உடனிருந்தார்:

அப்போது இளவரசி கூறுகையில்,”அப்பல்லோ மருத்துவமனையில்,ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது சசிகலா மட்டுமே உடனிருந்து பார்த்துக் கொண்டார் எனவும்,75 நாட்களும் மருத்துவமனைக்கு தான் சென்று வந்ததாகவும்,ஆனால் ஓரிரு முறை மட்டுமே கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்ததாகவும் ஆறுமுகசாமி ஆணையத்தில் கூறியதாக தகவல் வெளியாகியது.

ஜெயலலிதா,அப்பல்லோ மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார்?:

அவரைத் தொடர்ந்து,ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததை தவிர வேறு உபாதைகள் அவருக்கு இருந்தது தனக்கு தெரியாது என்றும் 2016 ஆம் ஆண்டு செப்.22 ஆம் தேதி ஜெயலலிதா அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார்? என்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்று தனக்கு தெரியாது என ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்திருந்தார்.

மறுவிசாரணை:

இந்நிலையில்,அப்பல்லோ மருத்துவர்களிடம் இன்று முதல் 3 நாட்கள் மறுவிசாரனையை ஆறுமுகசாமி ஆணையம் நடத்த உள்ளது.விசாரணை தொடர்பாக 9 மருத்துவர்களுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்ட நிலையில்,இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது.இந்த விசாரணைக்கு பின்னர் ஜெ.மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் இறுதி அறிக்கை தயார் செய்து அரசிடம் ஒப்படைக்கவுள்ளது.