என்னப்பா அப்படியே இருக்கு! மெழுகு அருங்காட்சியகத்தில் விராட் கோலியின் சிலை !!

 Virat Kohli : ஜெய்ப்பூரில் உள்ள மெழுகு அருங்காட்சியத்தில் விராட் கோலியின் மெழுகு சிலையை திறந்துள்ளனர்.

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன விராட் கோலியின் மெழுகு சிலையை நேற்று ஜெய்ப்பூரில் உள்ள மெழுகு அருங்காட்சியகத்தில் திறந்துள்ளனர். இந்த 35 கிலோ தத்ரூபமான விராட் கோலியின் மெழுகு சிலையை நேற்றைய தினமான பாரம்பரிய தினத்தில் அதாவது (World Heritage Day) ஏப்ரல் – 18 அன்று திறந்துள்ளனர். இந்த சிலையை முழுமையாக செதுக்குவதற்கு கிட்டத்தட்ட 2 மாதங்கள் ஆகி இருக்கிறது.

இந்த அருங்காட்சியகத்தில் 44 மெழுகு சிலைகள் உள்ளன அதிலும் குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இருவரின் சிலையும் உள்ளது. இவர்கள் இருவருக்கு அடுத்ததாக விராட் கோலியின் சிலை அங்கே நிறுவி உள்ளனர்.

மேலும், இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களின் சிலைகளும் உள்ளன. குறிப்பாக மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, ஏபிஜே அப்துல் கலாம், சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங், கல்பனா சாவாலா, அமிதாப் பச்சன் மற்றும் அன்னை தெரசா போன்ற சில சிலைகளை இந்த அருங்காட்சியகத்தில் நாம் காணலாம்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கேட்டு கொண்டதற்கு இணங்க இங்கு விராட் கோலியின் சிலையை வைத்துளோம் என அருங்காட்சியத்தில் நிர்வாகிகள் கூறி வருகின்றனர். அவர்கள் வடித்துள்ள அந்த விராட் கோலியின் மெழுகு சிலை அவ்வளவு தத்ரூபமாக இருக்கிறது என அவரது ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகின்றனர். தற்போது நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி சிறப்பாக விளையாடி வருவதோடு 361 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை கைவசப்படுத்தியுள்ளார்.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.