இது நல்ல முடிவு… தோனியின் 7ம் நம்பருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது குறித்து ராஜீவ் சுக்லா கருத்து!

இந்திய கிரிக்கெட்டுக்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி செய்துள்ள மிகப்பெரிய பங்களிப்பை கெளரவிக்கும் வகையில், அவரது ஜெர்சி நம்பர் 7-க்கு ஓய்வு அளித்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அறிவித்திருந்தது. இந்திய கிரிக்கெட் வாரியம் 2004ல் தோனி அறிமுகமானதில் இருந்து விளையாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எம்எஸ் தோனி ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவரது ஜெர்சி நம்பர் 7க்கும் ஓய்வு அளிக்கவேண்டும் என்றும் அதுதான் வருக்கு செலுத்தும் மரியாதையை எனவும் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட பலர் வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு, முன்னாள் வீரர்கள் இன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

நம்பர் 7க்கு ஓய்வு… எம்.எஸ் தோனியை கெளரவித்த பிசிசிஐ!

இந்த நிலையில், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஜெர்சி நம்பர் 7க்கு ஓய்வு அளிக்கப்பட்டது குறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது, தோனியின் ஜெர்சி நம்பர் 7க்கு ஓய்வு அளிக்கப்பட்டது என்பது ஒரு நல்ல முடிவு. இந்திய கிரிக்கெட்டுக்கு தோனியின் இணையற்ற பங்களிப்புகளுக்கு இது ஒரு சான்றாகும். இந்தியா கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களில் அவரும் ஒருவர்.

எனவே, பிசிசிஐயின் இந்த முடிவுஎன்பது  எம்எஸ் தோனி இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக அவருக்குக் கிடைத்த மரியாதையாகும். உலக கிரிக்கெட்டிற்கும் இந்திய கிரிக்கெட்டிற்கும் மகத்தான பங்களிப்பை செய்துள்ளார். இதன்மூலம் ஜெர்சி நம்பர் 7-ஐ இந்திய வீரர், வீராங்கனைகள் யாரும் பயன்படுத்த முடியாது. அனைத்து வகை கோப்பைகளை வென்ற முன்னாள் இந்திய கேப்டனான எம்எஸ் தோனி, தனது 15 ஆண்டுகால வாழ்க்கையில் கிரிக்கெட் உலகில் அழியாத முத்திரையை பதித்துள்ளார்  என தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்