விவாதிக்கப்படாமல் 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது வருத்தமளிக்கிறது – ராகுல் காந்தி

எந்தவொரு விவாதமுமின்றி 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது வருத்தமளிக்கிறது.

டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், இந்த குளிர்காலக் கூட்டத்தொடரானது டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி,நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மற்றும் 26 மசோதாக்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றத் திட்டமிட்டிருந்தது.

இன்று காலை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகளின் மக்களவை எம்பிக்கள் சபாநாயகர் வெங்கையா நாயுடு அவர்களின் இருக்கையை முற்றுகையிட்டும், முழக்கத்தையும் எழுப்பி வந்தனர். இதன்காரணமாக, நாடாளுமன்ற மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து, 12 மணிக்கு பின் மீண்டும் தொடங்கிய மக்களவையில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வழிவகுக்கும் மசோதாவுக்கு மக்களவை எம்பிக்கள் ஒப்புதல் அளித்தனர். இதனையடுத்து, மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், 3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவை  மக்களவையில் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், தற்போது மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் 3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் இரு அவைகளிலும் வேளாண் சட்டம் ரத்து மசோதா நிறைவேற்றபட்டுள்ள நிலையில், இந்த மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக  வைக்கப்படவுள்ளது.

 இந்நிலையில், நாடாளுமன்றத்திற்க்கு வெளியே பேட்டியளித்த ராகுல் காந்தி அவர்கள், நாங்கள் முன்பே கூறியபடி, மத்திய பாஜக அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றுள்ளது. ஆனால் எந்தவொரு விவாதமுமின்றி 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது வருத்தமளிக்கிறது. இதுகுறித்து விவாதிக்க மத்திய பாஜக அரசு பயப்படுவதாக தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய ஓராண்டு ஆனது ஏன்? 700 விவசாயிகள் உயிரிழப்பிற்கு பிறகு தான் வேளாண் சட்டங்களை ரத்து செய்யதிருக்க வேண்டுமா? விவசாயிகள் மரணம், வேளாண் சட்ட விவகாரங்கள் குறித்து பிரதமர் ஏன் மன்னிப்பு கேட்கவில்லை? இந்த விவகாரத்தில் விவசாயிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய மக்களின் பலத்தை மத்திய அரசால் எதிர்கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. வரவிருக்கும் சில மாநிலத் தேர்தல்களை மனதில் வைத்தே தற்போது சட்டங்களை ரத்து செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.