திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதான் !!அன்புமணி பரபரப்பு தகவல்

  • அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • அதிமுக உடன் கூட்டணி வைக்குமாறு ராமதாசிடம், பாமக தொண்டர்கள் வலியுறுத்தினார்கள் என்று அன்புமணி தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.

இந்த அதிமுக-பாஜக-பாமக கூட்டணிக்கு ஒரு புறம் ஆதரவு இருந்தாலும் மறுபுறம் எதிர்ப்பும் கிண்டலும் அதிகமாக இருந்தது.குறிப்பாக சமூக வலைத்தளமான ட்விட்டரில்  என்ற ஹஷ்டாக் ட்ரெண்டாகியது.இதில் அதிமுக-பாமக கூட்டணி குறித்து மீம்ஸுகள் பரவி வந்தது.

இந்நிலையில் கூட்டணி தொடர்பாக சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி பதில் அளித்துள்ளார்.அவர் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி முடிவெடுக்க பாமக நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரம் வழங்கி பொதுக்குழு முடிவு செய்தது .நிர்வாகிகளை கேட்டறிந்த பின் கூட்டு முடிவின்படி அதிமுகவுடன் கூட்டணி வைக்கப்பட்டது. அதிமுக உடன் கூட்டணி வைக்குமாறு ராமதாசிடம், பாமக தொண்டர்கள் வலியுறுத்தினார்கள்.

10 அம்ச கோரிக்கைகளை முதல்வரிடம் வழங்கி உள்ளோம். நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளோம்.விவசாய கடன் ரத்து, காவிரி படுகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட திட்டங்கள் வரக்கூடாது என்ற கோரிக்கையை பார்த்துக்கொள்வதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கும் அரசு நடவடிக்கை எடுக்கும்.நாங்கள் அழுத்தம் கொடுப்போம்.

அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி சேர மாட்டோம் என சொன்னது உண்மை, மறுக்கவில்லை.ஆனால் 2011-ல் சொன்னபோது இருந்த சூழல், தற்போது இல்லை. இப்போது இரு பெரும் தலைவர்களும் இல்லை.தற்போது தமிழக மக்களுக்காகவே இந்த கூட்டணி முடிவை எடுத்துள்ளோம்.

விமர்சனம் செய்தால் கூட்டணி வைக்கக் கூடாதா?  என்றும் கேள்வி எழுப்பினார்.  இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டோம் என முடிவெடுத்துள்ளோம் .இந்த கூட்டணியால் பாமகவின் கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம்.

மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் எங்களை அணுகியது.திமுக-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது உண்மைதான்.

தோல்வி பயத்தால் ஸ்டாலின் எங்கள் மீது அவதூறுகளை வீசுகிறார்.ஆனால் நாங்கள் அவரை மறுவிமர்சனம் செய்ய மாட்டோம்.

பாமக அளித்த ஊழல் புகார் குறித்து ஆளுநர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்.8 ஆண்டுகளாக தனித்து நின்றோம். யாராவது பாராட்டினீர்களா என்றும் கேள்வி எழுப்பினார்.இவ்வாறு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி பதில் அளித்துள்ளார்.

முன்னதாக  அதிமுக, திமுகவுடன் இனி கூட்டணி வைக்கமாட்டோம் என்று அன்புமணி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment