“இது கொள்ளையடிப்பதற்கு சமம்” – காங்.மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைப்பதாகவும்,இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7-ம் குறையும் என்றும்,அனைத்து மாநில அரசுகளும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்திருந்தார்.

அந்த வகையில்,தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.22-ம்,டீசல் லிட்டருக்கு ரூ.6.70-ம் குறைக்கப்பட்டுள்ளது.இதனால்,இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதைப்போல, கேரளா,புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களும் பெட்ரோல்,டீசல் விலையை குறைத்து வருகின்றன.

இந்நிலையில்,பெட்ரோல்,டீசல் விலையை ஏற்றி விட்டு பின்பு குறைப்பது கொள்ளையடிப்பதற்கு சமம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:

“2 மாதங்களில் லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்திவிட்டு,தற்போது பெட்ரோல் லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 7 ரூபாயும் குறைப்பது கொள்ளையடிப்பதற்கு சமம்.மேலும்,மாநிலங்களுக்கு மத்திய நிதிஅமைச்சரின் அறிவுரை அர்த்தமற்றது.மத்திய கலால் வரியை ஒரு ரூபாய் குறைக்கும் போது,அந்த ரூபாயில் 41 பைசா மாநிலங்களுக்கு சொந்தமானது.

எனவே,பெட்ரோல் மற்றும் டீசல் மீதான செஸ் வரியை (மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளாத தொகையை) மத்திய அரசு குறைப்பதுதான் உண்மையான விலை குறைப்பு”,என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment