IPL2022:ரோஹித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு ஊதியத்தில் இருந்து ரூ.12 லட்சம் அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்.

ஐபிஎல் 2022-இன் 15-வது சீசனில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மும்பை பிரபோர்ன் மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. பிற்பகல் நடைபெற்ற இப்போட்டியில், மும்பையை அணியை வீழ்த்தி டெல்லி அதிரடியான முதல் வெற்றியை இந்த சீசனில் பதிவு செய்தது.

இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்தது. இதில் அதிகபட்சமாக இஷாந்த் கிஷன் 81 ரன்களும், ரோஹித் சர்மா 41 ரன்கள் அடித்து அசத்தினார்கள். மும்பை அணி வெற்றி பெற்றுவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், டெல்லி அணி அபாரமாக விளையாடி 18.2 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 179 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

இதனிடையே, இறுதி கட்டத்தில் டெல்லி அணியின் பேட்டர்களின் அதிரடியான ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் மும்பை அணி பந்துவீச்சாளர்கள், பந்துவீச்சில் அதிக நேரத்தை எடுத்துக்கொண்டனர். இந்த நிலையில், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக ஓவர்கள் வீசியதற்காக மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஊதியத்தில் இருந்து ரூ.12 லட்சம் அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம்.

ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியன் பிரீமியர் லீக்கின் 15வது சீசனில் நேற்று நடைபெற்ற போட்டியில் இரண்டாவது பாதியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசாமல், மெதுவாக ஓவர்கள் வீசியதற்காக மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு ஊதியத்தில் இருந்து ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்