5 லட்சம் கோடியை வெறும் 30 நிமிடத்தில் இழந்த மும்பை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்…!

மும்பை பங்குச்சந்தையில்,சென்செக்ஸ் மற்றும் நிப்டி சரிவு காரணமாக,முதலீட்டாளர்கள் 5 லட்சம் கோடியை வெறும் 30 நிமிடத்தில் இழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலையானது கடந்த ஆண்டை விட மிகத் தீவிரமாக பரவி வருகிறது.மேலும்,தொற்றினால் பாதிக்கபட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமான வசதிகள்கூட இல்லாமல் பல்வேறு மாநிலங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன.

இதன் காரணமாக,நாட்டின் பங்குச்சந்தை மிக அதிக அளவிலான பாதிப்பை எதிர்கொள்கின்றன.எனவே,பங்குச்சந்தையின் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை வெளியேற்றி வருகின்றனர்.

இதனையடுத்து,நேற்று காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1200 புள்ளிகளுக்கும்  அதிகமான சரிவைக் கண்டது.இதனால் முதலீட்டாளர்கள்,வெறும் 30 நிமிடத்திற்குள் சுமார் 5 லட்சம் கோடி அளவிலான முதலீட்டு சரிவை எதிர்கொண்டனர் .

எனினும்,அதன் பின்னர் வர்த்தகம் மிகக் கணிசமான வளர்ச்சி அடைந்து சென்செக்ஸ் குறியீடு 47,949.42 புள்ளிகளும்,நிஃப்டி குறியீடு 14,359.45 புள்ளிகளும் பெற்று நேற்றைய வர்த்தகம்  நிறைவடைந்துள்ளது.

இருப்பினும்,மும்பை பங்குச்சந்தை சரிவின் எதிரொலி காரணமாக முதலீட்டாளர்கள் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களில் இருக்கும் தங்களது முதலீடுகளை குறைத்து வருகின்றனர்.