இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தனர்.
இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் 3-வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, முதலில் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினார். ஆனால், இரண்டாவது போட்டி போல இந்தப் போட்டியிலும் கே.எல் ராகுல் ரன் எடுக்காமல் வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து 2-வது போட்டியில் அரைசதம் விளாசிய இஷான் கிஷன் இந்த போட்டியில் 4 ரன்களுடன் நடையை கட்டினார். பின்னர் இறங்கிய ரிஷாப் பந்த் 25, ஸ்ரேயாஸ் ஐயர் 9 ரன்கள் எடுத்தார். ஆனால் மத்தியில் இறங்கிய இந்திய அணி கேப்டன் விராட்கோலி நிதானமாக விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் விளாசி 77*ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார்.
இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தனர். 157 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறக்கவுள்ளது. கடந்த போட்டியிலும் கேப்டன் விராட்கோலி அரை சதம் விளாசி 73*ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.