அமெரிக்காவில் மீண்டும் அதிர்ச்சி..! இந்திய நடனக் கலைஞர் சுட்டுக்கொலை

USA: அமெரிக்காவில் இந்திய பரதநாட்டிய கலைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நாட்டில் இந்திய வம்சாவளியினரின் உயிரிழப்புகள் அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மேலும் ஓர் உயிரிழப்பு அரங்கேறியுள்ளது. இந்தியாவின் கொல்கத்தாவைச் சேர்ந்த அமர்நாத் கோஷ், குச்சிப்புடி மற்றும் பரதநாட்டியம் ஆகிய கலைகளில் தேர்ந்தவர்.

இவர் சென்னையில் உள்ள புகழ்பெற்ற கலாக்ஷேத்ரா அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார். அமர்நாத் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நடனத்தில் MFA படிப்பை படித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி மாலை நேர நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, மர்ம நபரால் அமர்நாத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அமர்நாத்திற்கு பெற்றோர் இல்லாத சூழலில், அவருடைய உடலைப் பெற்று இறுதிச் சடங்கு மேற்கொள்ள அங்குள்ள சில நண்பர்கள் தற்போது முயன்று வருகின்றனர், மேலும் அமர்நாத் கொலை செய்யப்பட்டதற்கான காரணத்தை தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.

Read More – காசா மக்களுக்கு விமானம் மூலம் நிவாரண உதவி.. அமெரிக்கா அறிவிப்பு..!

அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தியில், ”தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீசார் உதவியுடன் அமர்நாத் மரணம் தொடர்பில் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருவதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், கடந்த 2 மாதங்களில் மட்டும் இந்திய மாணவர்கள் 4 பேர் தனித்தனியான தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment